2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இழுவைப்படகுக்கு தடை விதிக்கவும்: பிரேரணை இன்று சமர்ப்பிப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயந்திர இழுவைப்படகு நடவடிக்கைகளைத் தடை செய்யுமாறு கோரிய பிரேரணையொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) தாக்கல் செய்யவுள்ளார். 

இந்தச் சட்ட மூலமானது 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கம் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் சட்டத்தில் திருத்தங்களை வலியுறுத்தி நிற்கின்றது. இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுகின்ற போது உலகிலே இந்த நடவடிக்கையை சிலி நாட்டைத் தொடர்ந்து தடை செய்கின்ற இரண்டாவது நாடாக இலங்கை காணப்படும். 

இந்தச் சட்ட மூலமானது இலங்கை கடற்பரப்பில் இழுவை நடவடிக்கைகளை தடை செய்வதை வலியுறுத்துவதுடன், பின்வரும் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. 

1. இழுவை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருதல்.

2.  இலங்கை கடற்பரப்புகளில் இழுவை நோக்கங்களுக்காக இழுவை வலைகளை வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், இறக்குமதி செய்தல் போன்றவற்றைத் தடை செய்தல். 

3.  மேலே குறிப்பிடப்பட்ட நியமங்களை மீறி இழுவை நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தெளிவாக குறிப்பிடுதல். 

வெளிநாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவர்கள், முக்கியமாக வடக்கு மீனவர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள், இதைத் தடுப்பதற்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதில் ஒரு படியாகவே இந்த சட்ட மூலமானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இந்த இழுவை நடவடிக்கையால் மிகவும் இலகுவில் அழியக்கூடிய கடல் வளங்களான அருகிவரும் கடல் உயிரினங்களும் பவளப் பாறைகளும்  ஒரு சில விநாடிகளில் அழிக்கப்படுகின்றன. இந்த காரணிகளுக்காகவே 2015ஆம் ஆண்டு முதல் தடவையாக உலகில் சிலி நாடானது தனது கடல் எல்லையில் இந்த நடவடிக்கையை முற்றாகத் தடை செய்தது.

இந்தோனேசியா, நியூசிலாந்து, பெலிஸே, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளும் தமது கடல் எல்லைகளில் இழுவை நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளன. அதைப்போலவே இந்தியாவின் தமிழ் நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இந்த பாரிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக மீன்பிடிப்பதற்கு வருடாந்த தடை நடைமுறைகளை கையாண்டு வருகின்றன. 

எனவே, இந்த சட்டமானது நடைமுறைப்படுத்தபடுகின்ற சந்தர்ப்பத்தில் ஆழ்கடல் இழுவையானது தடை செய்யப்படுவதுடன், அதுவொரு குற்றமாகக் கொள்ளப்படும். குற்றவாளியாக காணப்படுபவர், 02 வருட சிறைத் தண்டனையை பெறுவதோடு ரூபாய் 50,000 தண்டப் பணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X