2025 ஜூன் 11, புதன்கிழமை

ஊவா, சப்ரகமுவ மாணவர்கள் நிர்க்கதி

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கே திரும்பிச் செல்லுமாறு, பாடசாலைகளின் அதிபர்கள் தங்களை வற்புறுத்துவதாகவும் இன்னும் சில பாடசாலைகளின் அதிபர்கள், விடுகைப்பத்திரங்களை வழங்கி, பலவந்தமாக வெறியேற்றிவிட்டதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்விபயின்ற வெளி மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள், கவலை தெரிவிக்கின்றனர்.

இடைநடுவிலேயே விரட்டிவிடப்பட்டமையால் அல்லது வெளியேற்றுவதற்கு எத்தனிப்பதனால், பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக, அம்மாணவர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவுகள் உள்ள பாடசாலைகளில், கணிதம் மற்றும் விஞ்ஞானப்பிரிவுகளில் பயிலும், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களே, இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில், இவ்விரு பிரிவுகளும் உள்ள பாடசாலைகளில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கற்றுவருகின்றனர்.

சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் இருந்தாலும், கணிதம் மற்றும் விஞ்ஞானப்பிரிவுகள் இல்லை. இன்னும், சில பாடசாலைகளில் இவ்விரு பிரிவுகள் இருந்தாலும், போதியளவான ஆசிரியர்கள் இல்லை.

ஆகவேதான், தாங்கள் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை தெரிவு செய்ததாக, இவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

சாதாரண தரத்தில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவிட்டு, உயர்தரத்தில், கணிதம் அல்லது விஞ்ஞானம் அல்லாத ஏனைய பிரிவுகளில் கற்பது, தங்களுடைய எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதனால், தங்களால் சென்றுவரக்கூடிய  வெளிமாவட்டங்களைத் தெரிவு செய்ததாகவும் அம்மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறான நிலையில், தங்களைப் பலவந்தமாக வெளியேற்றும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும், விடுகைப்பத்திரத்தை வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும், நுவரெலியா மாவட்டத்தில் பயிலும் வெளிமாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

நடந்துமுடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு, நுவரெலியா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

'தலையிட முடியாது'

'மத்திய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், மாகாணசபையினால் எடுக்கப்படும் முடிவுகளில் தலையிட முடியாது' என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

'நுவரெலியா மாவட்டத்துக்குள் உள்ள பாடசாலைகளில், ஏனைய மாவட்ட மாணவர்களை அனுமதிப்பதில்லை என நான் தீர்மானிக்கவில்லை. அம்முடிவு, மத்திய மாகாணத்தின் முடிவாகும்' என்றும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில், கல்விப் பொதுத் தராதர உயர்தர பிரிவில், விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளுக்கு உள்வாங்கப்பட்ட ஊவா, சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களை விலக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.   

'நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுமே மத்திய மாகாணத்தின் கீழேயே வருகின்றன. எனவே, இப்பாடசாலைகளின் விவகாரங்கள் தொடர்பில் என்னால் பதில் கூற முடியாது' எனவும் அவர் கூறினார்.

அழைப்புகளுக்கு பதிலில்லை

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில், விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளுக்கு உள்வாங்கப்பட்ட ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களை விலக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக, மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் ராமேஸ்வரனைத் தொடர்புகொள்ள முயன்ற் போதிலும் அம்முயற்சி பலனளிக்கவில்லை.

மத்திய மாகாணத்தின் விடயங்களில் மத்திய அரசாங்கம் தலையிடுவதில்லை என, இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கூறியதைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரான எம்.ராமேஸ்வரனிடம் தொடர்புகொண்டு கேட்க முயல்வதற்காக, அவரது அலைபேசிக்கு இரண்டுமுறை அழைப்பை ஏற்படுத்தியபோதிலும், இருமுறையும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10