2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

காதலித்ததால் கொன்றேன்: தந்தை பரபரப்பு வாக்குமூலம்

Editorial   / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 52). இவருடைய மனைவி உஷா (43). இவர்களுடைய மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் ஓமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார். மாணவி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வர்ஷினி தங்கி இருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இரும்பாலை பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த நாளன்று நெல்லையில் இருந்து வரதராஜன் சேலம் வந்து மகளை பார்த்து சென்றதும், அவருடைய செல்போன் சுவிட்ச்-ஆப் ஆகி இருப்பதும் தெரிய வந்தது. இதனால் வரதராஜன் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி, அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வரதராஜனை பொலிஸார்  சேலத்தில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வரதராஜன் பொலிஸில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் வர்ஷினி நெல்லையில் பிளஸ்-2 படிக்கும்போது அந்த பாடசாலைக்கு பயிற்சி அளிக்க வந்த டேக்வாண்டோ பயிற்சியாளருடன் பழக்கமானதால், அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு உள்ளது. பயிற்சியாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மகள் திருமணமானவரை காதலிக்கிறாள் என்ற தகவல் தெரிந்து அவளை கண்டித்தேன். காதலை கைவிடுமாறு பலமுறை கெஞ்சி பார்த்தேன்.

ஆனால் டேக்வாண்டோ பயிற்சியாளருடனான காதலை கைவிட மறுத்து விட்டாள். பின்னர் பிளஸ்-2 முடித்ததும், சேலத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தேன். அதன்பிறகும் காதலை கைவிடவில்லை. கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த மகள் வீட்டிற்கு வராமல், டேக்வாண்டோ பயிற்சியாளரை பார்த்துவிட்டு சேலம் வந்தது தெரிந்தது.

இறுதியாக மகளை சந்தித்து காதலை கைவிடுமாறு கேட்கலாம் என்று சம்பவம் நடந்த அன்று சேலம் வந்து மகள் கையை பிடித்து காதலை கைவிடுமாறு கெஞ்சினேன். அவள் மறுத்து விட்டாள். ஆத்திரத்தில் அடித்தபோது கீழே விழுந்த வர்ஷினி முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். பின்னர் செல்போனை எடுத்துக்கொண்டு சென்னை சென்று வடபழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்தேன்.

பின்னர் அங்கிருந்து திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் 2 முறை சென்றேன். என்னை பொலிஸ் தேடுவது தெரிந்ததால் கோர்ட்டில் சரண் அடையலாம் என்று நினைத்து சேலம் வந்தேன். ஆனால் பொலிஸார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X