2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கல் அகழ்ந்தபோது கல் விழுந்து ஒருவர் பலி

Freelancer   / 2023 மார்ச் 22 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இயற்கை வன பகுதியில் மாணிக்கக்கல் தோண்டிய ஐவரில் ஒருவர் மீது பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகுடுகலை அப்பில் பாம் பகுதி (சிரச வன பகுதி) என்று அழைக்கப்படும் இலக்கம் 03 இயற்கை வனத்துக்குள் பொகவந்தலாவை பிரதேசத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (21) இரவு ஐவர் வருகை தந்து அங்கு மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பாரிய குழி ஒன்றை தோண்டி இருவர் மாணிக்க கல் அகழும் போது மண்மேடுடன்  பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

இதில் பொகவந்தலாவ குயினா  தோட்டத்தை சேர்ந்த அம்மாசி விஜயகுமார் (வயது 40) என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இவரை சுமந்து கொண்டு ஏனைய நான்கு பேரும் வனப்பகுதியில் இருந்து புதன் (22) அதிகாலை ஹைபொரஸ்ட் பிரதான வீதிக்கு வருகை தந்துள்ளனர்.

அதேநேரத்தில் காட்டுக்குள் சிலர் மாணிக்கக்கல் அகழ்வதாக மாகுடுகலை வன காரியாலயத்துக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு வன பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதன் போது அங்கு காயங்களுக்கு உள்ளான ஒருவரை சுமந்து கொண்டு நால்வர் வருவதை அவதானித்த அதிகாரிகள் நால்வரையும் கைது செய்து தாம் பயணித்த வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

காயங்களுக்கு உள்ளானவரை உடனடியாக  ஹைபொரஸ்ட் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரை வன பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து ஹைபொரஸ்ட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த நபரின் சடலத்தை சட்ட வைத்தியர் ஒருவரின் ஊடாக பிரேத பரிசோதணை செய்வதற்காக,  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹைபொரஸ்ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X