2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சுற்றுச் சந்தி வழக்கு: நீதிமன்றம் அதிரடி

Editorial   / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

ஆண்டியர் சந்தியில் சட்டத்துக்கு முரணாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும்   சுற்றுச் சந்தி தொடர்பில்  பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்  ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத்துக்கு முரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிரினால்  தொடரப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (16)  அன்று சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்  ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன் போது நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் ஏற்பாடுகளின் படி 'அபிவிருத்தி பிரதேசமாக' வர்த்தமானியின்  மூலம் பிரகடனம் செய்யப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகள் யாவும் குறித்த பிரதேசம் அமையப் பெற்றுள்ள உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்நிலையில் மேற்படி சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதி  பெறப்படாமல்  பல்வேறு தொழில் நுட்பக் குறைபாடுகளோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையானது சட்ட முரணாக மேற்கொண்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி தொடரப்பட்ட குறித்த வழக்கில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர்,  பிரதம பொறியியலாளர், நிறைவேற்று பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரரான சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிர் சார்பில்  மன்றில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் மு.அஸ்ஸமினால்   மேற்கொள்ளப்பட்ட நீண்ட சமர்பணத்தைக் கேட்டறிந்த மன்றானது எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆந் திகதி  பிரதிவாதிகள் மன்றில் தோன்றுவதற்கான அறிவித்தலை அனுப்புமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X