2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தாஜுதீன் கொலை வழக்கு: நாரஹேன்பிட்டி ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.பாருக் தாஜுதீன்

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரியை (ஓ.ஐ.சி), இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

இந்த வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயர்மட்டப் பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டுள்ளனர் எனக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறினர் என, சிரேஷ்ட அரச வழக்குரைஞர் டிலான் ரத்னாயக்க கூறினார்.

பொலிஸ் அதிகாரிகள் 20 பேரின் வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிந்துள்ளதாகவும் அவர்களின் வாக்குமூலங்கள், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன எனவும் அவர் கூறினார்.

தாஜுதீனின் ஜனாஸாவை பிரேத பரிசோதனை செய்த முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர தலைமையிலான சட்ட வைத்திய அதிகாரிகள் அணி மீது, இலங்கை மருத்துவர் பேரவை, ஓர் ஒழுங்கு நடவடிக்iயை எடுத்துள்ளதென நீதவான் விசாரணையின் போது, இலங்கை மருத்துவர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்குரைஞர் சத்துர கல்ஹேன கூறினார்.

இந்த சட்டவைத்திய அதிகாரிகள், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன், ஜூன் மாதம் முன்னிலையாக வேண்டுமென அழைக்கப்பட்டுள்ளார்.

கிருலப்பனையில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை(பேர்ஸ்) தொடர்பில், நாரஹேன்பிட்டி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியின் நடத்தை கேள்விக்குரியது என வழக்குரைஞர் ரத்நாயக்க கூறினார்.

தாஜுதீனுக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நடந்த அலைபேசி உரையாடலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு மொபிட்டல் தொலைத் தொடர்பாடல் நிறுவனத்தைப் பணிக்க வேண்டுமென, குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,  நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டனர்.

இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காணொளிகளை கனடா மற்றும் இங்கிலாந்தின் உதவியுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக வழக்குரைஞர் கூறினார்.

மொபிட்டல் நிறுவனத்துக்கு, அலைபேசி உரையாடல் விவரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கும் படி பணித்த நீதவான், இலங்கை மருத்துவர் பேரவை, தமது விசாரணை அறிக்கையை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணித்ததோடு, வழக்கை மே மாதம் 26ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X