2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தென்னிலங்கை தமிழ் மக்களுக்கான அரசியலமைப்பு யோசனை தயார்

Gavitha   / 2016 மார்ச் 08 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின் சமூக, அரசியல் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் நியமிக்கப்பட்ட விசேட அறிவோர் குழுவின் அரசியலமைப்பு யோசனை வரைவின் ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

இந்தக் குழு தயாரித்துள்ள வரைவு, கூட்டணியின் செயற்குழுவில் பரிசீலிக்கப்பட்டு அரசியலமைப்புப் பேரவையில் முன்வைக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், அதில் மேலும் கூறியுள்ளதாவது,

'பதினாறு அங்கத்தவர்களைக் கொண்ட அறிவோர் குழுவொன்று, கடந்த மாதம் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தவிசாளராக சமூக ஆய்வாளர் பி.முத்துலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பேராசிரியர் எம்.சின்னத்தம்பி, பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் டி.தனராஜ், பேராசிரியர் மூக்கையா, கலாநிதி எஸ்.சந்திரபோஸ், விரிவுரையாளர் எஸ்.விஜயச்சந்திரன், விரிவுரையாளர் கௌரி பழனியப்பன், சிரேஷ்ட அரச பணியாளர் எம்.வாமதேவன், ஆய்வாளர் கௌதம் பாலசந்திரன், விரிவுரையாளர் உமாதேவி துரைராஜ், தொழில் அதிபர் சந்திரா சாப்டர், சமூக ஆய்வாளர் ரமேஷ் நந்தகுமார், முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, கூட்டணியின் பொதுச் செயலாளர் அன்டன் லோரன்ஸ், உப செயலாளர் சண். பிரபாகரன் ஆகியோரும் இக்குழுவில் அடங்குகின்றனர்.

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின், குறிப்பாக, அண்மைய இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகளை ஆய்வு செய்து, உரிய பிரேரணைகள் அடங்கிய வரைவைத் தயாரித்துத் தரும் பணி, இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்தப் பணி பூர்த்தியாகி உள்ளதாக, குழுவின் தவிசாளர் பெ.முத்துலிங்கம் அறிவித்துள்ளார். இந்நிலையில், இது, கூட்டணியின் செயற்குழுவின் பரிசீலனைக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகளின் கோரிக்கைகளுடன் எமது பிரேரணைகள், வாழ்நிலைமைகள் மற்றும் தளங்களுக்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், இந்நாட்டின் அரசியல் அதிகாரப் பகிர்வில் உரிய பங்கை நாமும் எதிர்பார்க்கின்றோம் என்பதை நாடு அறிந்துகொள்ளும் வகையில் எமது பிரேரணைகள் அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். அத்துடன், நம் வரைவு தொடர்பாக சகோதர தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களக் கட்சிகளுடனும் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகார சபை, 25,000 பேருக்கு ஒரு பிரதேச சபை, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு, மத்திய - மேற்கு - ஊவா - சப்ரகமுவ மாகாணசபைகளின் ஐந்து பேர் கொண்ட அமைச்சரவையில் ஓர் அமைச்சுப் பொறுப்பு ஒதுக்கீட்டுக் கட்டாயம், நாடாளுமன்றத்தில் இரண்டாம் சபை, சமஷ்டி - ஒற்றையாட்சி சொற்பிரயோகங்களைத் தவிர்த்து பூரண அதிகாரப் பகிர்வு அம்சங்களை கொண்ட அரசியல் முறைமை,  மதசார்பின்மை,  தோட்டத் தொழிலாளர் உட்பட நாட்டின் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் விசேட வளர்ச்சி ஒதுக்கீடுகள் ஆகியவை உட்பட்ட  பல்வேறு அம்சங்கள் எமது ஆலோசனைகளின் போது  கலந்துரையாடப்பட்டுள்ளன. இவை பற்றிய இறுதி முடிவுகள் செயற்குழுவில் எடுக்கப்பட்டு, அவை உரிய தளத்தில் சமர்ப்பிக்கப்படும்' என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X