2025 மே 31, சனிக்கிழமை

தங்க முலாம் துப்பாக்கி: துமிந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 மே 29 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பிலான வழக்கில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் விளக்கமறியல், ஜூன் 5 ஆம் திகதி வரை  கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால், வியாழக்கிழமை (29) நீடிக்கப்பட்டது.  

முந்தய செய்தி

தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவை, மே.29 வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு கல்கிசை பதில் நீதவான்  சாந்த குமார, சனிக்கிழமை (24) உத்தரவு பிறப்பித்திருந்தது.

அத்துடன், கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைத்த பின்னர், பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பெற்ற மருத்துவ அறிக்கைகளின்படி, சந்தேக நபரான   துமிந்த திசாநாயக்கவின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்புமாறு பதில் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், துமிந்த திசாநாயக்கவின் வீட்டில் சமையல்காரராகப் பணியாற்றிய ஒருவரே இரண்டு பெண்களுக்கும் துப்பாக்கியைக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வெள்ளவத்தை பொலிஸாரால் ருவன்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அந்த மூவரிடமும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘ஹெவ்லொக் சிட்டி’ அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பாதுகாப்பு காவலர் ஒருவர், T56 துப்பாக்கியுடன் வந்த பெண்ணொருவரை வைத்திருப்பதாக, செவ்வாய்க்கிழமை (20) அன்று 119 என்ற அவசர தொலைபேசிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சொகுசு வாகனத்தில் வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர் குடியிருப்புக்குத் துப்பாக்கியைக் கொண்டு வந்தபோது,​​ அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் தனியார் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி, அந்தப் பெண் கொண்டு வந்த பயணப் பையைச் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு, அப்பெண்ணைத் தடுத்து வைத்துக்கொண்டு பொலிஸூக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஸ்தலத்துக்கு விரைந்த வெள்ளவத்தை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியைக் கைப்பற்றியதுடன், பெண்கள் இருவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .