2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

தோசை சாப்பிட்ட இரு சிறுமிகள் பலி; பெற்றோர் கவலைக்கிடம்

Editorial   / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 கடையில் வாங்கிய தோசை மாவைக்   கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ,அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள   கடையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி, தோசை மாவு வாங்கியுள்ளார். மறுநாள் காலை அந்த மாவைக் கொண்டு தோசை தயாரித்து விமல், அவரது மனைவி பாவனா மற்றும் அவர்களது இரு மகள்களும் சாப்பிட்டுள்ளனர்.

உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே நால்வருக்கும் வாந்தி, வயிற்றோட்டம், குமட்டல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 3-ஆம் திகதி விமலின் மூன்று மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 5-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி 4 வயது மகளும் உயிரிழந்தார். விமல் மற்றும் பாவனா ஆகிய இருவரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் முறைப்பாட்டை அடுத்து, உள்ளூர் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் குறித்த பால் பண்ணையில் இருந்து மாவு மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், உடற்கூறாய்வு அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கடை உரிமையாளர் கனஷ்யாம் ஷா, "தினமும் பல வாடிக்கையாளர்கள் எங்களிடம் தோசை மாவு வாங்குகிறார்கள். ஏப்ரல் 1-ஆம் திகதி மட்டும் சுமார் 100 கிலோ மாவு விற்பனையானது. இந்தச் செய்தி அறிந்ததும் மற்ற வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு கேட்டேன், ஆனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

விமல் 3 கிலோ மாவு வாங்கிய போதிலும், அதில் 300 கிராம் மாவு மட்டுமே தோசை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .