2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தரமற்ற மருந்து வழக்கு: முக்கிய ஆவணங்கள் அடங்கிய களஞ்சியசாலையில் தீ விபத்து

Editorial   / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்புபட்ட 'தரமற்ற மருந்து விநியோக' வழக்குடன் தொடர்புடைய மருந்து விநியோக நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருந்துகள், மருந்து மாதிரிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கொண்ட இந்தக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தானது, வழக்கின் முக்கிய சாட்சியங்களை அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கருத்துத் தெரிவிக்கையில்:

"குறித்த களஞ்சியசாலையில் சர்ச்சைக்கரிய காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து மாதிரிகளும், கொள்வனவு மற்றும் விநியோக முறைகேடுகள் தொடர்பான முக்கிய கோப்புகளும் வைக்கப்பட்டிருந்தன. இவை தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு மிகவும் அவசியமான ஆதாரங்களாகும்," எனக் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என வைத்தியர் சமல் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தீ விபத்தானது இயற்கையானதா அல்லது ஆதாரங்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதியா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மருத்துவ விநியோகப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணைகளை, இக்கோப்புகள் மற்றும் மாதிரிகளின் இழப்பு கடுமையாகப் பாதிக்கும் என அவர் எச்சரித்தார். மேலும், கடந்த கால மருந்து விநியோக நடவடிக்கைகள் தொடர்பான நீதித்துறை விசாரணைகளைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட முயற்சிகள் குறித்துச் சந்தேகம் வெளியிட்ட அவர், சட்ட அமுலாக்கப் பிரிவினர் இவ்விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் எவ்வித தாமதமுமின்றி முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .