2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

புகலிடக் கோரிக்கைப் படகுகள் மூன்றை ஆஸி. தடுத்துள்ளது

Kanagaraj   / 2016 மே 10 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட ஆரம்பத்திலிருந்து இதுவரையிலும், புகலிடக் கோரிக்கைப் படகுகள் மூன்றை அவுஸ்திரேலியா தடுத்துள்ளது. இவற்றுள் இலங்கையிலிருந்து பெண்களையும் சிறுவர்களையும் ஏற்றி வந்த படகு ஒன்றும் அடங்குகின்றது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டுற்றன், ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் புகலிடக் கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலியாவின் கடும் நடவடிக்கையின் கீழ், அவர்கள் புறப்பட்ட இடத்துக்கு அல்லது மிக மோசமான நிலைமையில் உள்ள பசுபிக் தீவு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

மக்கள் கடலில் மரணிப்பதை நிறுத்துவதே தமது கொள்கை என அரசாங்கம் கூறுகின்றது.

தமது நடவடிக்கைகளுக்கு 'இறைமையுள்ள எல்லைகள் நடவடிக்கை' எனப் பெயரிட்டுள்ள அவுஸ்திரேலியா, செம்டெம்பர் 2013இல் ஏராளமான படகுகளைத் தடுத்துள்ளது. கடந்த மார்ச் வரையான 600 நாட்களில், ஒரு படகுகூட அவுஸ்திரேலியாவுக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டதுடன், 698 பேர்களை ஏற்றிவந்த 25 படகுகளை, புறப்பட்ட இடத்துக்கு அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பி விட்டது.

இவ்வருடம், 03 படகுகள் தடுக்கப்பட்டதாகவும் இதில், கடந்த வாரம் இலங்கையிலிருந்து வந்த மரத்திலான சிறிய படகு ஒன்றும் அடங்குவதாகவும் குடிவரவு அமைச்சர் கூறினார்.

இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் உள்ளடங்களாக 12 பேர் கொண்ட குழு, வெற்றிகரமாக மே 06ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது என அமைச்சர் கூறினார்.

இந்த இலங்கைப் படகு, அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை 500 மீற்றர் அளவுக்கு நெருக்கியிருந்ததாகச் செய்திகள் தெரிவித்தன.

இவர்கள், கடந்த வியாழக்கிழமை இரவோடு இரவாக, தனி விமானம் மூலம் இரகசியமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுள் சிசுக்கள் உட்பட ஏழு பிள்ளைகள் இருந்ததாகச் செய்தி தெரிவித்தது.
உண்மையாகவே அகதிகளாக இருப்பினும், படகு மூலம் வரும் எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அமைச்சர் கூறினார்.

'அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வார்கள் என நம்பி, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X