2025 ஜூலை 07, திங்கட்கிழமை

படைப்புழு விவகாரம்; ஐ.நா எச்சரிக்கை

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கையான கட்டுப்பாட்டு முறைகளும் சிறந்த நிர்வாகமும் இல்லாத பட்சத்தில், படைப்புழுப் பீடை, பயிர்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின்

 ஜீவனோபாயத்தைப் பாதிக்குமென, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (UNFAO) தெரிவித்துள்ளது.  

இலங்கையில் பரவியுள்ள படைப்புழு பற்றி, குறித்த ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள ஸ்தாபனம், புதியதொரு பிரதேசத்தில் படைப்புழு பரவும்போது, அதனை முற்றாக இல்லாதொழிப்பது நடைமுறையில் இயலாத காரியம் என்றும் எனவே, விவசாயிகள் முறையாக அறிந்து கட்டுப்படுத்த வேண்டிய இன்னுமொரு பீடையாக படைப்புழு மாறியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.  

இந்தப் பீடை, அமெரிக்காக் கண்டத்துக்குச் சொந்தமானது. இது 2016ஆம் ஆண்டின் முற்பகுதியில், மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் முதற்றடவையாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஆபிரிக்க உப-சஹாரா பிராந்தியம் முழுவதிலும், விரைவாகப் பரவியிருந்தது.  

2018ஆம் ஆண்டு ஜூலை, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் படைப்புழு இருந்தமை உறுதிசெய்யப்பட்டதுடன், தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில், யேமனிலும் கண்டுபிடிக்கப்பட்ட படைப்புழு, தற்போது இலங்கையிலும் பரவியுள்ளதென, ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது,  

படைப்புழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான தெரிவுகள் அடங்கலாக உலகின் பல பாகங்களில் கற்றறிந்த பாடங்களைப் புரிந்துகொள்வதும் இலங்கையின் நிலைமைக்கு போதியளவிலான பதிலளிப்புக்குரிய முதற்படிகளில் அத்தியாவசியமான செயற்பாடுகளாகும் என்றும், அந்த ஸ்தானம் கூறியுள்ளது.  

இதற்காக, குறித்த ஸ்தாபனமானது, படைப்புழுவின் உயிரியல் மற்றும் சூழலியல் காரணிகள், பீடை பற்றிய தகவல் அறியும் விதம், அதனைக் கட்டுப்படுத்தும் மூலோபாயங்கள் அடங்கலாக பீடையின் பின்புலத் தகவல்களை, விவசாய அமைச்சுடனும் விவசாயத் திணைக்களத்துடனும் பகிர்ந்துகொண்டுள்ளது.  

ஆபிரிக்காவில் படைப்புழு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, குறிப்பாக விவசாயக் களநிலைப் பாடசாலைகளால் வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட படைப்புழு பீடைக் கட்டுப்பாடு (IPM) மூலோபாயங்கள் தொடர்பான களநிலை வழிகாட்டல்கள் மற்றும் வழிகாட்டல் குறிப்புகள், விவசாய அமைச்சுக்கும் விவசாயத் திணைக்களத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.  

கள ஆய்வு அல்லது பொறிகளின் பயன்பாடு மூலம், படைப்புழுக்களின் எண்ணிக்கை மட்டங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக, உணவு விவசாய ஸ்தாபனம் வடிவமைத்த Fall Armyworm Monitoring and Early Warning System (FAMEWS) என்ற திறன்பேசிச் செயலி போன்ற கருவிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.  

FAMEWSஆனது, படைப்புழுவை சகல மட்டங்களிலும் கட்டுப்படுத்த உதவுகிறது. அவையாவன, பீடையை இனங்காணுதல், தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, பீடையின் வியாபகம் பற்றிய வரைபடங்களை உருவாக்கி ஊடுருவல் மட்டத்தை கண்காணித்தல், முக்கியமான இயற்கை எதிரிகளையும் பயனுறுதிவாய்ந்த முறையில் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான முறைகளைக் கற்றுக் கொள்ளுதல் போன்றவையாகும்.  

படைப்புழு பீடையைக் கட்டுப்படுத்தி, இலங்கையின் விவசாய சமூகத்தவர்களது ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதில், உள்ளூர் அதிகாரிகள் கொண்டுள்ள கரிசனைக்கு ஆதரவு வழங்குவதற்கு உணவு விவசாய ஸ்தாபனம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இந்த ஸ்தாபனமானது இலங்கையின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, அரசாங்கம் கோரும் தொழில்நுட்ப உதவிகளையும் நிபுணத்துவத்தையும் வழங்குமென, மேலும் தெரிவித்துள்ளது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .