2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

“பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம்”

Mayu   / 2024 மார்ச் 25 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் திங்கட்கிழமை (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலையில் போசாக்கு உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் காலை உணவை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

“ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை” என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இது உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9134 அரச பாடாசலைகளிலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த வருட பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட ஏனைய அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X