பா. நிரோஸ்
தனக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அவர்களைப் பிணையில் விடுதலை செய்யவேண்டுமாயின் பிணை நிற்க, எம்.பிக்களாகிய தாங்கள் தயார் என்றார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமைக்கான பொறுப்பை, ஜனாதிபதியும் இராணுவத்தினருமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குறைந்த வேதனத் திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் நேற்று (05) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ''சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவத்தைச் சேர்ந்தவரே இருக்கிறார். கொரோனா வைரஸ் ஒழிப்புச் செயலணியின் தலைவராகவும் இராணுவத் தளபதியே இருக்கிறார். அதுமட்டுமன்றி 25 மாவட்டங்களுக்கும் தலா ஓர் இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தகுதிவாய்ந்த சிவில் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றார்.
'இலங்கை ஒரு தீவாக இருந்தும், நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதற்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமைக்கு, இராணுவ மயமாக்கலே முக்கிய காரணமாகும்' என்றார்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் ஆகக்குறைந்த சம்பளம் தொடர்பிலான சட்டமூலத்தைக் கொண்டுவந்திருக்கலாம். அம்மக்களும் தங்களுடைய சம்பள உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் ஒரு சிறந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தினார்.