2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மே.10 வரை விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவை ரத்து

Editorial   / 2025 மே 08 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ராணுவ முப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும்விதமாக புதன்கிழமை (07) அதிகாலை, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், மொத்தம் 9 தீவிரவாதிகளின் தளங்களை தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 244 இடங்களில் போர் பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்ரீநகர், லே, அமிர்தரஸ், சண்டிகர் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், ஷிம்லா, தரம்சாலா போன்ற விமான நிலையங்களிலும் விமானங்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வழியாகச் செல்லும் 7 சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளன. நெதர்லாந்தைச் சேர்ந்த கேஎல்எம் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த அறிவிப்பு வரும் வரை பாகிஸ்தான் வான்வெளியை தங்களது விமானங்கள் பயன்படுத்தாது என அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த 6-ம் திகதி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X