2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முன்னாள் போரளிக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடு சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரனை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு புதுக்கடைநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும் கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என்றும், இவர் மீது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு அமையவே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி அதிகாலை, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடராஜா சபேஸ்வரன், நேற்றுப் புதன்கிழமை (23) நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

ஏற்கெனவே இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, மன்றில் ஆஜராகியிருந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், சந்தேகநபருக்கு எதிரான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் கோரியதனையடுத்து, நேற்று வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நேற்றைய வழக்கு விசாரணையின்போதும், தமக்கு கால அவகாசம் வழங்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்த நிலையில், வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் இவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜா சபேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் சென்ற நிலையில், இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்து திருப்பி அழைத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், இவரைக் கைதுசெய்து? 4ஆம் மாடியில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைத்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி நாட்களான 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.

யுத்தத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இறுதி யுத்தம் இடம்பெறுவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்த சபேஸ்வரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் சரணடைய வேண்டும் என இராணுவம் விடுத்த உத்தரவுக்கு அமையவே சரணடைந்திருந்தார். 

இதற்கமைய இராணுவத்தின் ஜோசப் முகாம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தாய் நீதிமன்றில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு அமைய நீதிமன்றினால் கடந்த 2010ஆம் ஆண்டு விடுவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .