2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மரணதண்டனைத் தீர்ப்பின் வழக்குப் புத்தகம் மாயம்

Kanagaraj   / 2016 மே 10 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகேயை, சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், மரணதண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்ட வழக்குப்புத்தகம் மாயமாகிவிட்டதாக அறியமுடிகின்றது.

1986ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதியோ அல்லது அதனை அண்மித்த நாளொன்றிலோ, சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த டபிள்யூ. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர், 22 வருடங்களுக்குப் பின்னர், கடந்த சனிக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டார்.

கருணாரத்ன லியனகே, தனது வீட்டு விறாந்தையில் படுத்திருந்த போதே, சந்தேகநபர் அவரைச் சுட்டுக்கொன்று விட்டுத் தலைமறைவாகியிருந்தார். பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, 1994ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதியன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், 22 வருடங்களுக்கு பின்னர், புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட அவர், நீதவானின் உத்தரவின் பேரில் நேற்றுத் திங்கட்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்குப்புத்தகம் இல்லாமையினால், மரணத்தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பை அறிவிப்பதனை ஒத்திவைத்து, சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக, வழக்குப்புத்தகத்தை உடனடியாக முன்னிலைப்படுத்துமாறு மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட சந்தேகநபரான இவர் உள்ளிட்ட இன்னும் இருவருக்கும், அன்று மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. இதிலிருவர், மேன்முறையீடு செய்ததில் விடுதலையாகினர்.

இவருக்கு மட்டுமே மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார். எனினும், பிரதிவாதி இல்லாமல் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டதுடன், அவருக்குத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X