2025 ஜூலை 05, சனிக்கிழமை

மழையால் 4,956 பேருக்கு இன்புளுவென்ஸா

ஆர்.மகேஸ்வரி   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மழையுடனான வானிலையையடுத்து, டெங்கு, எலிக்காய்ச்சல் போன்று இன்புளுவென்ஸா காய்ச்சலால் இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இந்த மாதம் 27ஆம் திகதி வரை 2,73,262 பேர் சிகிச்சைப் பெறுவதற்கு நாடுபூராகவுமுள்ள வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு வந்துள்ளனர்.

இவர்களுள் 4956 பேருக்கு இன்புளுவென்ஸா ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின்  பிரதி பணிப்பாளர்  வைத்திய நிபுணர் குமார விக்ரம தெரிவித்தார்.

இன்று (30) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மழையுடனான வானிலையையடுத்து, இன்புளுவென்ஸா காய்ச்சல் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதென்றும் இன்புளுவென்ஸா வைரஸ் காய்ச்சலால் நவம்பர் மாதமே அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ள​னரென்றும் கூறினார்.“

இதற்கமைய, 729 பேர் நவம்பர் மாதமும் 535 பேர் இந்த மாதமும்  இன்புளுவென்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 96,000 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன், நவம்பர் மாதம் 21,000 பேரும் இந்த மாதம் இதுவரையான காலப்பகுதியில் 11,000 பேரும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அநுர ஜயசேகர தெரிவித்தார்.

மேலும், இந்த வருடம் 90 பேர் டெங்கு காய்ச்சலால் மரணமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியதுடன், டெங்கு காய்ச்சலைப் போலவே எலிக்காய்ச்சலும் நாட்டில் அதிகரித்துள்ளதென்றும் இதுவரை 5,500 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக கூறினார்.

எனினும் விவசாய நிலங்களில் நீர் நிறைந்து அதில் எலியின் சிறுநீர் கலந்து அது பக்றீரியாவாக மாறி சிறு புண்கள், காயங்கள் ஊடாக உடலுக்குள் செல்வதால் எலிக்காயச்சல் பரவி வந்தாலும் தற்போது மழைக்காலங்களில் சேறு நீர் தேங்கியிருக்குமாயின் அதனூடாகவும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக பட்டம் விடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்களும் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .