2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’மீள் பிறப்பாக்கம் ஊடாக 70 சதவீத மின் உற்பத்தி’

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2030 ஆம் ஆண்டாகும்போது, நாட்டின் மொத்த மின் தேவையின் 70 சதவீதத்தை, மீள் பிறப்பாக்கச் சக்தி வள மூலங்களின் மூலம், உற்பத்தி செய்வதற்கு திட்டமிட வேண்டுமென,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின், எதிர்கால திட்டங்கள் தொடர்பில்,  ஜனாதிபதி அலுவலகத்தில், நடைபெற்ற கலந்துரையாடலின்போதே,  ஜனாதிபதி  இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், காலநிலை மாற்றம் காரணமாக அனல் மின் மற்றும் பெற்றோலியம் போன்ற எரிபொருள்களை தவிர்த்து, உலகின் அனைத்து நாடுகளும் மீள் பிறப்பாக்கச் சக்தி வளத்தை நாடி வருகின்றனர். நாட்டின் மின் தேவையின் வருடாந்த அதிகரிப்பு 6 சதவீதமாகும். அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன் இணைந்ததாக, மின்சக்தி வளத்துக்கான கேள்வி வேகமாக அதிகரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றார். 

எதிர்கால தலைமுறைக்கு, பெறுபேறுகளை அனுபவிக்கக்கூடிய பேண்தகு அபிவிருத்திக்கு வழிவகுக்கும் வகையில், முடியுமானளவு மீள் பிறப்பாக்கச் சக்தி வளங்களை பயன்படுத்த வேண்டுமென,  ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். 

மேற்படி திட்டத்துக்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ள நிறுவனங்கள், சாத்தியவள அறிக்கைகளை தயாரிக்க வேண்டுமென்பதுடன், அனுமதியை விரைவாக வழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

ஏதேனும் ஒரு திட்டத்துக்கு அனுமதி கோரப்படும்போது, 14 நாள்களுக்குள் அதற்கு பதில் வழங்கப்படாவிட்டால், அது அனுமதியளிக்கப்பட்டதாக கருதுவதே பொருத்தமானதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

மீள் பிறப்பாக்கச் சக்திவள அபிவிருத்திக்கு, அரசாங்கம் அதிகம் முன்னுரிமையளித்துள்ளது. அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிடுமாறு,  ஜனாதிபதி தனது செயலாளருக்கு இதன்போது  பணிப்புரை விடுத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .