2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’முஸ்லிம் பங்கரவாதத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளதா?’

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அழகன் கனகராஜ்

 

வெளிநாடொன்றின் உதவியுடன், இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதத்துக்கும் மதவாதத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளதா எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில், உடனடியாக விசாரணைகளை நடத்தி, சபைக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர் என்று சுட்டிக்காட்டியதோடு, அவ்விரு முஸ்லிம் இளைஞர்களது தந்தையின் வீட்டிலிருந்தும், ஆயுதங்கள், ஆவணங்கள் மற்றும் தொலைத்தொடர்புக் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளனவென, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, புத்தளம் பிரதேசத்திலும் பாரிய தொகையில் ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்படியான நிலைமையில், வெளிநாடொன்றின் உதவியுடன் முஸ்லிம் பயங்கரவாதம் உருவாக்கப்படுகின்றதா எனக் கேள்வியெழுப்பிய அவர், அவ்வாறானதொரு நிலைமையொன்று ஏற்படுத்தப்படுமாயின், ஏனைய இனங்களுடன் சகோதரத்துவத்துடன் வாழும் முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்தானது என்றார்.

இதற்குப் பதிலளித்த சபைமுதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, முறையாக விசாரணைகளை முன்னெடுத்தமையால் தான், சில விடயங்கள் அம்பலமாகின என்றார்.

குறுக்கிட்ட விமல் வீரவன்ச, ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைக் கைதுசெய்து தடுத்துவைத்திருந்த போது, மேல் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதியொருவர், அவர்களை விடுவித்துக்கொள்வதற்கு அழுத்தம் கொடுத்தாரென அறியமுடிவதாகவும் அதனால்தான், விசாரணையின் விவரங்களை சபைக்கு அறியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டாதாகவும் கூறினார்.

அப்போது, ஆளும் தரப்பினர் பக்கத்திலிருந்தவர்கள், யார்? யாரெனக் கோஷமெழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த விமல் எம்.பி, அதுதான் விசாரணைகள் தொடர்பில் சபைக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இந்நிலையில், மேற்படி விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த ஆளுங்கட்சி எம்.பியான ஹப்புஹாமி, புத்தளத்திலும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான விசாரணைகளை, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுக்கின்றனர் என்றும் ஆகையால், ஏனைய விவகாரங்களில் அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முயல்வது போல, இந்த விவாரத்திலும் அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ள வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X