2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

Freelancer   / 2026 ஜனவரி 22 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இலங்கையில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

நேற்று முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படுவதோடு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை - இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது விளையாட்டு இரசிகர்கள் இந்தத் தங்கக் கோப்பையை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அதன் பின்னர், கோப்பையைக்  கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லத்  திட்டமிடப்பட்டுள்ளதுடன், அங்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு இரசிகர்கள் உலகக் கோப்பையுடன் நினைவுப் புகைப்படங்களை எடுக்கவும் அதைப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்பு அதற்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்ப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

2012 இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடத்தப்படும் மாபெரும் போட்டி, இந்த உலகக்கிண்ணப் போட்டியாகும்.

கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகளுக்கான அட்டவணை 2025 நவம்பர் 25 ஆம் திகதி இந்தியாவில் வெளியிடப்பட்டதுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம், பல்லேகலே சர்வதேச மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானம் ஆகியவற்றை இலங்கையில் நடத்தப்படும் போட்டிகளுக்கான இடங்களாகத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, 8 போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்திலும், 5 போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்திலும், 7 போட்டிகள் பல்லேகலே சர்வதேச மைதானத்திலும் நடைபெறவுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X