2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விசேட நீதிமன்றுக்கு த.தே.கூ வரவேற்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில், சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணை தொடர்பான அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்;பட்டுள்ளது.  

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இவ்வாறானதொரு விசாரணை நடைபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல காலமாக தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்து வந்ததுடன், தற்போது மேற்படி சர்வதேச அமைப்பு இது தொடர்பாக பரிந்துரைகளை தமது அறிக்கையில் உட்படுத்தியிருப்பது நமக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றது. 

மேலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் மற்றும் பக்கசார்பற்ற விதத்தில் நியாயம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.  

இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகளையும், குறிப்பாக அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கின்றோம். தற்போது ஒரு புதிய இலங்கை உருவாகியுள்ளதாகவும் இனி இங்கு நடைபெறும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கும் என்றும் வெளிநாட்டு அமைச்சர் மனித உரிமை சபையில் கடந்த திங்கட்கிழமை ஆற்றிய உரையின் போது உறுதியளித்திருந்தார். வாக்குறுதிகளை மீறும் ஒரு கடந்த காலம் இலங்கைக்கு இருந்ததை அமைச்சர் ஒப்புக்கொண்டதோடு, புதியதொரு யுகத்;துக்கு தேசம் பிரவேசிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

இருப்பினும், உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த மேற்படி அறிக்கையை ஏற்பதற்கான மற்றும் ஏற்று சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான மனோபாவத்தை இலங்கை அரசு ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.  

இதனடிப்படையில், மேற்படி அறிக்கையின் பரிந்துரைகளை, இந்நிரலின் பிற்பகுதியில் சமர்பிக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளை நாம் கேட்டுக்கொள்கின்றோம். 

அத்துடன், அநியாயம் இழைக்கபட்ட சகல சமூகத்தவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கும் விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைத்து செயல்படுமாறும் நாம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம். 

இதன் மூலமே பிரகாசமானதொரு எதிர்காலத்தை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்த முடியும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .