2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வரலாற்றைத் திரிக்க வேண்டாமென அமைச்சர் மனோ வேண்டுகோள்

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டின் வரலாறு, ஓர் இன, மதத்துக்கு மாத்திரம் சொந்தமானதாகத் தீர்மானிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்த தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், அப்படியானால் நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டைத் தன்னால் முன்னெடுக்க முடியாதென்றார்.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க தெரிவுக்குழு கூட்டத்தின்போது, தொல்பொருளாராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம், மேற்படி வேண்டுகோளை அமைச்சர் விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம் எனவும் 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும் வடக்கு, கிழக்கிலும் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி, விரவி இருந்தது என்பதற்கு வரலாறு உண்டு எனவும், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின்போது மேலும் பேசப்பட்டதாவது,

“தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்தில் உருப்படியான தமிழ் தொல்பொருளாராய்ச்சியாளர் கிடையாது. வடக்கு, கிழக்கில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் புத்தர் சிலை வைக்க நீங்கள் வழி செய்கிறீர்கள். உங்களுக்கு தமிழ் பெளத்தர்களைப் பற்றி தெரியுமா?

“இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கு, கிழக்கிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த தமிழர்கள் பெளத்த சமயத்தை தழுவி இருந்தார்கள்.

“இன்று நீங்கள் வடக்கு, கிழக்கில் எங்கேயாவது பெளத்த சின்னங்களை காணுவீர்கள் என்றால் அது, தமிழ் பெளத்த சின்னங்கள். அதை சிங்கள பெளத்த சின்னங்கள் என்று கூறி அத்துமீறிய குடியேற்றம் செய்கிறீர்கள். அடாத்தாக பெளத்த தேரர்களை அழைத்து சென்று புதிய விகாரைகளை கட்ட உதவுகிறீர்கள்.

“திருகோணமலை, திருக்கேதீஸ்வரம் ஆகியவை தமிழ் சைவ தேவார பாடல்களில் இடம்பெற்ற தலங்கள். இவற்றின் கட்டுமான பணிகளுக்கு தடை போடுகிறீர்கள்.

“வவுனியாவில் வெடுக்குநாறி மலை மீதான கோவிலுக்கு போகும் மலைப்பாதை படிக்கட்டுகளை அமைக்க தடை போடுகிறீர்கள். அப்படியானால் எப்படி சிவனொளிபாதமலைக்கு படிக்கட்டுகளை அனுமதித்தீர்கள்?

“நான் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர். உங்கள் திணைக்களம் இப்படி நடந்துகொண்டால் எனக்கு இந்நாட்டில் தேசிய ஒருமைபாட்டை ஏற்படுத்த முடியாது. இவைபற்றி நான் இனி கடுமையாக இருக்க போகிறேன்” என, அமைச்சர் மனோ கணேசன், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கேள்விகளை எழுப்பினார். 

இதேவேளை, “திருகோணமலையில் பொலிஸாரின் நேரடி ஆதரவுடனேயே திருகோணமலை தென்னமவராடியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை வைப்புக்கு தொல்பொருளாராய்ச்சி திணைக்களம் துணை செய்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சமயத்தில் எப்படி ஒரு பெளத்த தேரர் அங்கே புத்தர் சிலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்?” என, சுமந்திரன் எம்.பி,  தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம், திருகோணமலை பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார்.     

இக்கூட்டத்தில், சபாநாயகர் கருஜயசூரிய, அமைச்சர் மனோ கணேசன், முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம், கிறிஸ்தவ விவகார அமைச்சர்  ஜோன் அமரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன், தொல்பொருளாராய்ச்சித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெல, திருகோணமலை பிரதேச பொலிஸ் அதிகாரிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .