2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

’விஜய் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியமை முறைகேடானது’

Freelancer   / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபா சொத்து மதிப்பை குறைத்து காட்டியமை முறைகேடானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளன எனவும் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக் கணக்கை மறைத்துள்ளார் என்றும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபா எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபா எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட, பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைவாக காட்டியமை உண்மைத் தகவலை மறைத்ததற்கு சமம் என்பதால், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானவையா, உண்மையானவையா என விசாரிக்க, வருமான வரித் துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஜே.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபா வரை குறைத்து காட்டியமை முறைகேடானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .