2025 மே 19, திங்கட்கிழமை

'பாதயாத்திரையின் புனிதத் தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறது'

Thipaan   / 2016 ஜூலை 31 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், எம்.முபாரக்

ஒரு காலத்தில், பாதயாத்திரை செல்வதென்பது, தமது இறுதிக் காலத்தில் நன்மை செய்வதற்காக என்றிருந்தது. இன்று எடுத்த எடுப்பில் எல்லாவற்றுக்கும் பாதயாத்திரை என்று ஒரு கூட்டம் கிளம்பி, அதனுடைய புனிதத் தன்மைக்கு இழுக்கினை ஏற்படுத்தி வருகின்றது என, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், நேற்றுச் சனிக்கிழமை (30) தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தோப்பூர் பகுதி ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இது நல்லாட்சியின் செயற்பாடுகளை நாசப்படுத்துகின்ற கூட்டமாகும். ஐக்கிய தேசியக் கட்சியானது, கடந்த 20 வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்ததால், வேலைவாய்ப்பு விடயங்களில் எமது கட்சி ஆதரவாளர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

சமுர்த்தி வேலை வாய்ப்பு கூட, எமது கட்சி ஆதரவாளர்களுக்குக் கிடைக்க வில்லை. தற்போது நல்லாட்சி அரசாங்கம் அமைந்து தமது சேவைகளை மெதுமெதுவாகத் தவிழ்ந்து செய்து கொண்டிருக்கின்றது.

அத்தோடு, இன்னும் குறிப்பிட்ட காலத்தில் தனது நடையினை ஆரம்பித்து, ஓட்டம் எடுக்கும் போது நிச்சயமாக எமது கட்சி ஆதரவாளர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

அவ்வாறு விமோசனம் கிடைக்கும் காலத்தில் நான் எனது சேவைகளை கட்சி, இனம், மதம் என்கின்ற வேறுபாடுகளுக்கு அப்பால் செய்வேன். ஏனென்றால் எனது தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரது அரசியல் பயணத்தில் மூவின மக்களும் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளதோடு எனது அரசியல் பயணத்துக்கும் ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

ஆதலால், எனது எதிர்கால அரசியல் பயணம் மூவின மக்களையும் ஒன்றிணைத்ததாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X