2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

10 புனிதர்களின் திருப்பண்டங்கள் அடங்கி பேழை மீட்பு

Editorial   / 2024 ஜனவரி 05 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

பத்து புனிதர்களின் உடற்பாகங்கள் உள்ள திருப்பண்டங்களை உள்ளடக்கிய புராதன பேழை ஒன்று திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் புதன்கிழமை (03) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே தடவையில் பத்து புனிதர்களின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டமை ஆசியாவிலேயே  முதன் முறையாகும்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருகோணமலை மறை மாவட்டத்தின் சின்னக்கடை பங்கு என அழைக்கப்படும் புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தின் பங்கு குருமனையில் இருந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்தே இவ் புனித பண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என பங்கு குருவானவர் அருட்பணி எஸ்.ஆர்.ஜெயரடணம் கூறினார்.

கண்டெடுக்கப்பட்டுள்ள புனித பண்டங்கள் பத்து, ஒரு ஆலயத்தில்,ஒரே இடத்தில் கண்டறிப்பட்டுள்ளமையானது இலங்கையிலும் ஆசியா முழுவதிலும் இதுவே முதற் தடவை என அறியமுடிகின்றது.

ஒன்று அல்லது இரண்டு புனித பண்டங்கள் மட்டுமே ஆலயங்களில் இருப்பது சாதாரண நடைமுறை என்றும் ஆனால் இவ்வாறு பத்து புனித பண்டங்கள் ஓர் ஆலயத்தில் இருப்பது தாம் அறிந்தவரையில் இதுவே முதல் முறை எனவும் பங்கு குருவானவர் கூறினார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான ரோமின் வத்திகானிலிருந்து இவ் புனித பண்டங்கள் எந்த ஆண்டில் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்த வரலாற்று பதிவுகள் எதுவும் ஆலயத்தில் இல்லை எனவும் அறிய முடிகின்றது.

மெக்சிக்கோ நாட்டின் குவாடலூப்பே என்ற கிராமத்தில் புனித மரியாள் காட்சி அளித்தமையை அடுத்து புனித குவாடலூப்பே அன்னை ஆலயம் அங்கு அமைக்கப்பட்டது.

போர்த்துகீசர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்களால்,இலங்கையில் முதற் தடவையாக திருகோணமலை குவாடலூப்பே அன்னை ஆலயம் அமைக்கப்பட்டது.

இந்த புனித பண்டங்களை தற்போது பெருந்தொகையான கத்தோலிக்கர்களும் ஏனையோரும் தரிசித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X