2026 மார்ச் 26, வியாழக்கிழமை

அனல் மின் நிலையத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

'செழிப்பான மண் வளம், விவசாயம், கால்நடை, மீன் வளம் ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ள சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதைக் கண்டித்து  சேனையூர், நாவலடிச் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பசுமை திருகோணமலை அமைப்பு மற்றும் மூதூர் பசுமைக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டைபறிச்சான், சாளையூர், சேனையூர், கடற்கரைச்சேனை, சந்தோசபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடாக ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரனிடம் பசுமை திருகோணமலை அமைப்பினர் வழங்கிவைத்தனர்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கடந்த காலத்தில் எமது பிரதேசத்தில் காணப்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் கூறமுடியாத வகையில் பல துயரங்களை அனுபவித்து நாம் வாழ்ந்து வந்திருந்தோம். ஆயினும், எமது மீள்குடியேற்றமானது நல்லாட்சி அரசாங்கத்தால் நிறைவடைவதையிட்டு நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். இவ்வேளையில், சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையமானது சூழலுக்கும் மனித வாழ்வுக்கும் பாரிய  தீமைய ஏற்படுத்துமென்று கருதப்படுகின்றது. இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை எமக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது.  

செழிப்பான மண்வளத்தைக் கொண்டிருப்பதால் விவசாயத்தையும் நிறைவான கடல்படு பொருட்களில் வளத்தைக் கொண்டிருப்பதால் கடற்றொழிலையும் பிரதான தொழில்களாகக் கொண்ட எமது மக்களின் வாழ்க்கை, அனல் மின் நிலையத்தால் கேள்விக்குறியாகும் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.  

எனவே, நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பெரும் தலைவர் என்ற வகையிலும் இந்த நாட்டின் உழைக்கும் ஏழை மக்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்தவர் என்ற வகையிலும் தங்களிடம் இந்த அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டாமெனக் கேட்டுக்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .