2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி

Editorial   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு ரயில்களில் இரண்டு வாகனங்கள் மோதுண்டதில் இருவரும், மற்றொரு ரயிலுடன்  யானைகள் கூட்டமாக மோதியதில்4 யானைகளும் மரணித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவமொன்றில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். 

 
புத்தளம் - ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் வியாழக்கிழமை (28) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறிப்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பெலியத்தவில் இருந்து மருதானையை நோக்கி பயணித்த சாகரிக்கா கடுகதி ரயிலில், குப்பைகளை ஏற்றிச்சென்ற சிறியரக லொறியொன்று மோதி விபத்துக்கு உள்ளானது. 

கொடகம கஹவ எனுமிடத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் பயணித்த இரவு தபால் ரயிலில்,  கல்கமுவ பிரதேசத்தில் வைத்து, புதன்கிழமை இரவு 11 மணியளவில் யானைக்கூட்டமொன்று மோதியதில், 4 யானைகள் மரணமடைந்துள்ளனர். 

கல்கமுவ ரயில் நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதன் பின்னர் ஒரு மணிநேரத்துக்கு ரயில் பயணம் தாமதமாகியிருந்தது என்றும் ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


 ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .