2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

பட்ஜெட் இரகசியம் அம்பலம்

Editorial   / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இது தொடர்பான திட்டத்தை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட உரையில் நாட்டிற்கு  முன்வைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் புதன்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்ற “தேசிய தகவல் தொழில்நுட்ப விருது வழங்கும் விழா – NBQSA 2023” நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

உள்நாட்டைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த தகவல் தொழில்நுட்பத்  தயாரிப்புகள் மற்றும் புத்தாக்கங்களுக்கு உயர் அங்கீகாரம் வழங்குவதற்காகவும், அவர்களின்  தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தளத்தை உருவாக்குவதற்காகவும், தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனமான பிரிட்டிஷ் கணினி சங்கத்தின் இலங்கைப் பிரிவினால் ஆண்டுதோறும் இந்த விருது விழா நடத்தப்படுகின்றது.

தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையில் சிறந்து விளங்கிய பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருதுகளையும் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்…

‘’1980களின் தொடக்கத்தில் நான் கல்வி அமைச்சராக இருந்தபோது தகவல் தொழில்நுட்பம் பற்றி பேசினோம். அப்போது இலங்கையில் அதிகம் அறியப்படாவிட்டாலும், சின்க்ளெயார்  நிறுவனத்தின்  சின்க்ளெயார் அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் நம் நாட்டு  பாடசாலைகளுக்கு முதலாவது சின்க்ளெயார் கணினிகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிகளை மேம்படுத்துவதற்காக கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப கவுன்சில் தொடங்கப்பட்டது.

அந்த நேரத்தில்தான் பேராசிரியர் சமரநாயக்க கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி மத்திய நிலையத்தை ஆரம்பித்தார். அப்போது இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தது. ஆனால் எங்களிடம் இல்லாத பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. உதாரணமாக, கணினிகளை இறக்குமதி செய்ய எங்களிடம் போதுமான அந்நியச் செலாவணி இருந்தது. ஆனால் அதற்கான திறன் அவர்களிடம் இருக்கவில்லை.

இதற்கிடையில், கல்வித் துறையை மறுசீரமைக்க சீனா தயாராக இருந்தது. 1991 இல், கைத்தொழில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நான் இந்தியாவுக்கு விஜயம் செய்தேன். நான் பெங்களூர்  சென்றிருந்தேன். அங்குதான் இந்தக்  கைத்தொழில் தொடங்கியது. அவர்களிடம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி இருந்தது.

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்தை ஆரம்பிப்பது குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். அப்போது சீனாவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்தி வந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். அந்த நாடுகள் முன்னோக்கி நகர்ந்தன. இதைத் தொடர்ந்திருந்தால், இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியை நாம் சந்திக்க வேண்டியிருக்காது.

இருப்பினும், இப்போது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. அவை நடந்து  முடிந்துவிட்டன. இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டது போல், இதுவே எமக்கான கடைசி வாய்ப்பு. எனவே நாம் இப்போது தகவல் தொழில்நுட்பட்துடன் முன்னேற தயாராக வேண்டும். இல்லாவிட்டால் இந்த வாய்ப்பை என்றென்றும் இழக்க நேரிடும்.

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல, நாட்டின் வர்த்தக நிலையை எமக்கு சாதகமாக அமைத்துக்கொள்வதோடு, ஏற்றுமதியிலும்  தன்னிறைவாக இருக்க வேண்டும். மேலும் நம்மிடம் ஆடைத் தொழில் உள்ளது. நாம் தொடர்ச்சியாக தேயிலை மற்றும் ஆடைக் கைத்தொழில் துறை மீது தங்கியிருக்க முடியாது. புதிய பொருளாதார கட்டமைப்புத் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X