2026 மே 01, வெள்ளிக்கிழமை

’அரசாங்கத்தின் மக்கள் ஆணை முடிவுக்கு வந்துவிட்டது’

Freelancer   / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்திற்கு முறையான நவீன அரசியல் பொருளாதார வேலைத்திட்டம் எதுவும் இல்லை எனவும், அரசாங்கம் எந்த நான்கு அடிப்படை அரசியல் எதிர்பார்ப்புகளின் மீது கட்டியெழுப்பப்பட்டதோ அந்த நான்கு தூண்களும் இன்று முழுமையாகத் தகர்ந்து போயுள்ளன எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசாங்கம் எனும் அரசியல் தோற்றப்பாடானது மிகவும் விசேடமான நான்கு தூண்களின் மீதே உருவாக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினார்.

கடந்த 76 ஆண்டு காலப்பகுதியில் இல்லாத அளவிற்கு மிகவும் முன்னேற்றகரமான மற்றும் நவீன அரசியல் பொருளாதாரத் திட்டம் தங்களிடம் இருப்பதாகக் கூறிக்கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அத்துடன், அத்தகைய திட்டத்தை முன்னெடுப்பதற்கு மிகவும் பண்புள்ள, வேலை செய்யத் தெரிந்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்க மாதிரியை உருவாக்குவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்தனர். அந்த வேலைத்திட்டங்களின் ஊடாக சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் பெறுபேறுகளை மக்களுக்குச் சலுகைகளாகவும் வசதிகளாகவும் வழங்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இருப்பினும், இன்று அந்த நான்கு அரசியல் எதிர்பார்ப்புகளும் முழுமையாகத் தகர்ந்துள்ளதாகத் தெரிவித்த சஞ்சீவ எதிரிமான்ன, அரசாங்கத்திடம் எந்தவொரு புதிய பொருளாதாரத் திட்டமும் இல்லை என விமர்சித்தார்.

பாராளுமன்றத்தில் உள்ள 159 உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட 160 பேரைக் கொண்ட முழு அரசாங்கக் கட்டமைப்பும் தற்போது ஊழல் மற்றும் ஏமாற்றுத்தனமான ஒரு வழிமுறையையே பின்பற்றி வருவதாகவும், இதன் மூலம் அவர்கள் முன்வைத்த பண்புள்ள அரசியல் கலாசாரம் இல்லாது போயுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் நெருங்கியுள்ள போதிலும், எவ்வித விசேடமான சமூக, பொருளாதார முன்னேற்றமும் நாட்டில் ஏற்படவில்லை எனவும், அதன் நன்மைகள் எவையும் இதுவரை மக்களுக்குச் சென்றடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கிய அரசியல் ஆணை இப்போது செயலிழந்து முடிவுக்கு வந்துள்ளது எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் மக்கள் ஆணை காலாவதியாகிவிட்ட போதிலும், அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பணிபுரியத் தயாராக இருக்கும் சில லட்சம் ஆதரவாளர்களைக் கொண்ட கட்டமைப்பு இன்னும் அப்படியே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .