Editorial / 2020 செப்டெம்பர் 02 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ் சதீஸ்
சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்ததாக உள்ளதாகவும், அங்கு தமது பிள்ளைகளை எக்காரணங் கொண்டும் கல்வி கற்பதற்கு அனுப்ப முடியாது என்றும் மேற்படி கட்டட வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (02) காலை கல்லூரி அதிபரின் காரியாலயத்துக்கு முன்பாக திரண்டு கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வே.ராதாகிருஷ்ணன், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அமைத்து கொடுத்த புதிய கட்டடத்தின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டும் திறக்கப்படாமலேயே இருப்பது குறித்தும் பெற்றோர் கேள்வி எழுப்பினர்.
மேற்படி சேதமுற்றதாகக் கூறப்படும் வகுப்பறை மாணவர்களுக்காகவே புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளமையை பெற்றோர் சுட்டிக்காட்டினர்.

இது குறித்து பெற்றோர் கருத்துத் தெரிவிக்கையில், “தோமஸ் மண்டபத்தில் மேல் மாடியின் கூரைகள் எப்போது இடிந்து விழும் என்று தெரியாது. அதே வேளை கீழ்ப்புறமாக பலகைகள் உடைந்து விழும் அபாயம் இருப்பதால் குறித்த பகுதிக்கு மாணவர்கள் செல்ல வேண்டாம் என கல்லூரி நிர்வாகமே தடை போட்டிருக்கின்றது.
எனினும், பிள்ளைகளைப்பற்றிய எந்த அக்கறையும் இன்றி கல்லூரி நிர்வாகம், தரம் 6 மாணவர்களுக்கு அங்கேயே வகுப்புகளை தொடர்ந்தும் நடத்துகின்றது.
பல தடவைகள் நாம் எடுத்துக் கூறியும் இது குறித்து எவருமே அக்கறை கொள்கின்றார்கள் இல்லை. மேலும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய இரண்டு மாடி கட்டடம் மூடப்பட்டுள்ளது.

அது குறித்து கேட்டால் அதில் அதிபர், பிரதி அதிபர்களுக்குரிய காரியாலயங்கள் வரவிருப்பதாக சிலர் கூறுகின்றனர். இப்போது தேவை மாணவர்கள் கல்வி கற்பதற்கான வகுப்பறைகளே ஒழிய அதிபர் காரியாலயம் அல்ல. ஏற்கனவே புதிய கட்டடத்தில் காரியாலயம் இயங்கி வருகின்றது.
நாம் எமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி விட்டு அச்சத்தில் இருக்கின்றோம். எனவே இதற்கு ஒரு தீர்வு அவசியம். அதே வேளை பெற்றோர்களாகிய நாம் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டங்களும் இடம்பெறுவதில்லை.

புதிய அதிபர் பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் இது வரையிலும் பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டம் நடத்தப்படவில்லை. வகுப்பு ரீதியாக பெற்றோர் கூட்டங்களை நடத்தி மேசை நாட்காலிகளை திருத்தி தர கூறுகிறார்கள். இது அரசாங்க பாடசாலையா தனியார் பாடசாலையா என்று எமக்கு சந்தேகம் எழுகிறது.
நகரப் பகுதியில் பிரபலமான இந்த பாடசாலையில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து வலயக்கல்வி பணிமனை அக்கறை கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
விரைவில் புதிய கட்டடத்தை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக திறப்பதற்கு வலயக்கல்வி பணிப்பாளர் உறுதியளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேவேளை, அது தொடர்பில் கடிதம் ஒன்றையும் அனைவரும் கையொப்பமிட்டு வலயக்கல்வி பணிமனையில் ஒப்படைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago