
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு (நாளை அதிகாலை) நடைபெறவுள்ளது. ஆர்ஜன்டீனா, நெதர்லாந்து அணிகள் இன்றைய போட்டியில் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி அதிகாலை 1.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.
இரு அணிகளும் இதுவரை 08 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 04 போட்டிகளில் நெதர்லாந்து அணியும், 1 போட்டியில் ஆர்ஜன்டீனா அணியும் வென்றுள்ளன. 3 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
ஆர்ஜன்டீன அணி இதுவரை 04 தடவைகள் அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. நான்கு தடவைகளும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருந்தது. 1990ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆர்ஜன்டீனா அணி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி 04 தடவைகள் அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. இதில் 2 தடவைகள் வெற்றி பெற்றும் 2 தடவைகள் தோல்வியடைந்தும் உள்ளது. நெதர்லாந்து அணி கடந்த முறை இரண்டாமிடத்தைப் பெற்ற அணி. இரு அணிகளுக்குமிடையில் இறுதியா நடைபெற்ற முக்கிய இரண்டு மோதல்களிலும் நெதர்லாந்து அணி வென்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி சர்ச்சையான ஒரு போட்டியாக அமைந்தது. ஆர்ஜன்டீனா அணி வெற்றி பெறும் வாய்ப்புக்களை கொண்ட போட்டியில் அப்போது மரடோனா என வர்ணிக்கப்பட்ட ஓர்ட்டேகா, நெதர்லாந்து அணியின் கோல் காப்பாளரை தாக்கி கிடைக்க வேண்டிய பனால்டி உதையை இல்லாமல் செய்தார். நெதர்லாந்து அணி இந்தப் போட்டியில் 2 இற்கு 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது.