Shanmugan Murugavel / 2016 மே 04 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் புதிய பிரதம தேர்வாளராகப் பதவியேற்றுள்ள சனத் ஜெயசூரிய, இதற்கு முன்னைய தேர்வாளர் குழாம் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளதோடு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளராக, பெப்ரவரி மாதம் 2013இல் பதவியேற்ற சனத் ஜெயசூரிய தலைமையிலான குழு, மார்ச் மாதம் 2015ஆம் ஆண்டுவரை அப்பதவியிலிருந்தது. அதன் பின்னர், இவ்வாண்டு மே முதலாம் திகதி, சனத் ஜெயசூரிய தலைமையில் புதிய குழுவொன்று, தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளது.
சனத் ஜெயசூரிய முன்னர் விலகிய பின்னர், கபில விஜேகுணவர்தன தலைமையிலான தேர்வுக்குழு பதவி வகித்திருந்தது. அவர்கள் பதவி விலக்கப்பட்ட பின்னர், அரவிந்த டி சில்வா தலைமையில் இடைக்காலத் தேர்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
'100 சதவீதமான அனைத்தையும், இலங்கையின் கிரிக்கெட்டுக்காக செய்தேன். அந்தப் பணியிலிருந்து சிறிது மாற்றமடைந்தாலும், அதன் காரணமாக, மிக முக்கியமான பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கும். நாங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவெனில், மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். முதற்தடவையாக நான் தேர்வாளராக இருந்ததை விட, இப்போது என்னிடம் அதிகமான பொறுப்புக் காணப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
சனத் ஜெயசூரியவின் முதலாவது காலத்தில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரையும் இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரையும் வெற்றிபெற்ற போதிலும், அதன் பின்னர் நியூசிலாந்தில் வைத்துத் தோல்வியடைந்ததோடு, காலிறுதிப் போட்டியோடு 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியிருந்தது. உலகக் கிண்ணத்தில் இலங்கை வெளிப்படுத்தி மோசமான பெறுபேறுகளுக்கு, பகுதியளவில் பொறுப்பேற்பதாகத் தெரிவித்த ஜெயசூரிய, ஆனால் அதற்குப் பின்னர் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில், இலங்கை அணியால் வளர்க்கப்பட்டுவந்த வீரர்கள், மறக்கப்பட்டுவிட்டதாக, அவர் பழைய தேர்வாளர் குழாம் மீது குற்றஞ்சாட்டினார்.
புதிய தேர்வுக்குழுவொன்று வரும்போது, பழைய தேர்வுக்குழுவுடன் கலந்துரையாடி, அக்குழு சிறப்பாக மேற்கொண்ட சிறந்த விடயங்கள் குறித்து அறிந்துகொண்டு, அவற்றை முன்கொண்டு செல்ல வேண்டுமெனத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, இலங்கை அணி இந்த (மோசமான) நிலையில் இருப்பதற்கு, அது நடைபெறாமையே காரணமெனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .