2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

வெற்றி தோல்வியின்றி மூன்றாவது டெஸ்ட் முடிவு

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இதன் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலிய அணி வென்றெடுத்திருக்கிறது. 

மெல்பேர்ணில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். அவரது அபாரமான 192 ஓட்டங்களின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 530 ஓட்டங்களைப் பெற்றது. 

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மொஹமட் சமி 4 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில், அவுஸ்திரேலிய அணியின் கடுமையான பந்துவீச்சை சமாளித்து 465 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. விராட் கோளி 169 ஓட்டங்களையும், ரஹானே 147 ஓட்டங்களையும் பெற்றனர். 

அவுஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களில் ரையன் ஹரிஸ் 4 விக்கெட்களையும் மிட்செல் ஜோன்சன் 3 விக்கெட்களையும் லியோன் 2 விக்கெட்ளையும் கைப்பற்றினர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை வேகத்தோடு ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 9 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தனது இன்னிங்கை முடித்துக்கொண்டு இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஷோன் மார்ஷ் 99 ஓட்டங்களையும், கிறிஸ் ரோஜர்ஸ் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

384 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி, மீதமிருந்த ஓவர்களுக்குள் அதனை எட்ட முடியாது என்பதை உணர்ந்து போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவுசெய்யும் நோக்கில் விளையாடியது. 

ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும் மத்தியவரிசை வீரர்கள் நிதானமாக விளையாட, 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை இந்திய அணி பெற்றிருந்தவேளையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்திய அணி சார்பில் விராட் கோளி 54 ஓட்டங்களையும் ரஹானே 48 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்லில், அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஜோன்சன், ரயன் ஹரிஸ், ஹஸல்வூட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

போட்டியின் நாயகனாக ரயன் ஹரிஸ் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .