2025 மே 19, திங்கட்கிழமை

ஆசியக் கிண்ணத் தொடர்: சுப்பர் 4-க்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 4 சுற்றுக்குள் முதலாவது அணியாக ஆப்கானிஸ்தான் நுழைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான குழு ஏ போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர் 4-க்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்துள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்பத்திலிருந்தே முஜீப் உர் ரஹ்மானிடம் மொஹமட் நைம், அனமுல் ஹக், அல் ஹஸனை இரண்டாவது, நான்காவது, ஆறாவது ஓவர்களில் இழந்து தடுமாறியது.

பின்னர் ஏழாவது ஓவரிலேயே முஷ்பிக்கூர் ரஹீமை ரஷீட் கானிடம் இழந்த பங்களாதேஷ், அஃபிஃப் ஹொஸைன், மகமதுல்லா ஆகியோரையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் கானிடம் இழந்தது.

இந்நிலையில், மொஷாடெக் ஹொஸைனின் ஆட்டமிழக்காத 48 (31) ஓட்டங்களால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 128 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஆரம்பத்திலேயே ரஹ்மனுல்லாஹ் குர்பாஸை அல் ஹஸனிடம் இழந்ததுடன், குறிப்பிட்ட இடைவெளிகளில் ஹஸரத்துல்லா ஸஸாய், அணித்தலைவர் மொஹமட் நபியை ஹொஸைன், மொஹமட் சைபுடீனிடம் இழந்தது.

எனினும், இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத 42 (41), நஜிபுல்லாஹ் ஸட்ரானின் அதிரடியான ஆட்டமிழக்காத 43 (17) ஓட்டங்களோடு 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் உர் ரஹ்மான் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X