2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஊக்கமருந்துச் சோதனையில் இந்திய வீரர் சிக்கினார்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 24 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு இன்னமும் இரண்டு வாரங்களுக்குக் குறைவான நாட்களே காணப்படும் நிலையில், அப்போட்டிகளில் பங்குபற்றுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த இந்திய வீரரொருவர், ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரரான நர்சிங் யாதவ் என்பவரே, இவ்வாறு சிக்கியுள்ளதாக, இந்தியாவின் ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மையான தேசிய ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மை, நேற்றுத் தெரிவித்தது.

74 கிலோகிராம் பிறீஸ்டைல் போட்டிகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட அவர், வழக்கமாக இடம்பெறும் சோதனையின்போதே சிக்கியுள்ளார். அவரது 'பி" மாதிரியும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அதிலும் அவரது ஊக்கமருந்துப் பாவனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒழுக்காற்று விசாரணை இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்துள்ள அம்முகவராண்மை, இது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தது.

2010ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற யாதவ், இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய போதிலும், பதக்கம் எதனையும் வென்றிருக்கவில்லை. யாதவ் தடை செய்யப்படுவாராயின், சுஷில் குமாருக்கு வாய்ப்புகள் ஏற்படுமெனக் கருதப்படுகிறது. பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலமும் இலண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்ற சுஷில், தனது பிரிவான 66 கிலோகிராம் பிரிவு இம்முறை நீக்கப்பட்டதையடுத்து, யாதவுடன் போட்டியிட வேண்டியேற்பட்டது. தற்போது, யாதவ் நீக்கப்படுவாராயின், அவரின் இடத்துக்கு சுஷிலுக்கு வாய்ப்புக் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .