Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில் இடம்பெற்ற போட்டிகளில், ஆர்ஜென்டின, அயர்லாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன. அத்தோடு, ஆர்ஜென்டின அணியின் வெற்றி காரணமாக, காலிறுதியை நோக்கி அவ்வணி நெருங்கியுள்ளது.
ஆர்ஜென்டின, டொங்கா அணிகளுக்கிடையிலான போட்டியில், முதற்புள்ளிகளை டொங்கா அணி பெற்ற போதிலும், அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்ஜென்டினா, 20-13 என்ற புள்ளிகள் கணக்கில் முதற்பாதியில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது காற்பாதியில் மேலதிகமான அழுத்தத்தை வழங்கி, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, அப்பாதியில் மாத்திரம் 25 புள்ளிகளைப் பெற்றதோடு, எதிரணிக்கு 3 புள்ளிகளை மாத்திரம் வழங்கியது. இறுதியில், 45-16 என்ற புள்ளிகள் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது.
இதன்படி, குழு 'சி"இலிருந்து காலிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை ஆர்ஜென்டினா அதிகரித்துக் கொண்டது. அக்குழுவிலிருந்து நியூசிலாந்து ஏற்கெனவே தகுதிபெற்றுள்ளதோடு, ஜோர்ஜியாவும் நமீபியாவும் வெளியேறியுள்ளதால், குழு சார்பாக காலிறுதிக்கான அடுத்த 2 இடங்களுக்கு ஆர்ஜென்டினாவும் டொங்காவும் போட்டியிடவுள்ளன. இதில், டொங்கா அணி, பலம்வாய்ந்த நியூசிலாந்தையும் ஆர்ஜென்டின அணி நமீபியாவையும் சந்திக்கவுள்ளதால், ஆர்ஜென்டின அணியே காலிறுதிக்குத் தகுதிபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்துக்கும் இத்தாலிக்குமிடையிலான போட்டியில், அயர்லாந்து அணி வெற்றிபெற்றது. இப்போட்டியின் முதற்பாதியில் 10-6 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த அயர்லாந்து, இறுதியில் போராட்டத்தை வெளிப்படுத்தி, 16-9 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் காரணமாமக, காலிறுதிப் போட்டிகளுக்கு அயர்லாந்து தகுதிபெற்றுள்ளது. இக்குழுவிலிருந்து பிரான்ஸ் அணியும் ஏற்கெனவே காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .