2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

செல்சியை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் யுனைட்டெட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலேயே, இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சியை மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே மார்கோஸ் அலொன்ஸோவிடமிருந்து பெற்ற பந்தை அல்வரோ மொராட்டா கோல் கம்பத்தை நோக்கி செலுத்த கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. மறுபக்கம், றொமெலு லுக்காக்குவின் உதையொன்றை செல்சியின் கோல் காப்பாளர் திபோ கோர்துவா அபாரமாகத் தடுத்திருந்தார்.

இந்நிலையில், 32ஆவது நிமிடத்தில் வில்லியன் பெற்ற கோல் காரணமாக செல்சி முதலில் முன்னிலை பெற்றது. எனினும் அலெக்ஸிஸ் சந்தேஸ், அன்டோனி மார்ஷியலின் பங்களிப்புடன் போட்டியின் 39ஆவது நிமிடத்தில் றொமேலு லுக்காக்கு பெற்ற கோல் காரணமாக கோலெண்ணிக்கையை முதற்பாதி முடிவுக்குள் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.

பின்னர், இரண்டாவது பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஜெஸி லிங்கார்ட், றொமேலு லுக்காக்குவிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கியதுடன் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் இறுதியில் வென்றிருந்தது. இதில், செல்சியின் அல்வரோ மொராட்டா பெற்ற கோலொன்று பிழையாக ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அன்டோனி மார்ஷியலை இரண்டாவது பாதியில் ஜெஸி லிங்கார்ட்டால் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸெ மொரின்யோ பிரதியீடு செய்தமை அவ்வணிக்கு வெற்றியை வழங்கியிருந்த நிலையில், தனது நட்சத்திர வீரர் ஈடின் ஹஸார்ட்டை பெட்ரோவால் செல்சி முகாமையாளர் அன்டோனியோ கொன்டே பிரதியீடு செய்தமை விமர்சனங்களைச் சந்தித்திருந்தது.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், கிறிஸ்டல் பலஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், போட்டி முடிவடைய இரண்டு நிமிடங்களிருக்கையில் ஹரி கேன் பெற்ற கோல் காரணமாக 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .