Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இதில், மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி, 241 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
4 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களுடன் இன்றைய இறுதி நாளை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் முக்கிய நம்பிக்கையாக, ஏபி டி வில்லியர்ஸ் இருந்தார். ஆனால், இன்றைய நாளின் மூன்றாவது பந்திலேயே, மொயின் அலியின் பந்துவீச்சில், எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழக்க, தென்னாபிரிக்காவின் நம்பிக்கைக்கு, பலத்த அடியாக மாறியது.
தொடர்ந்து, 2 ஓவர்களுக்குப் பின்னர் தெம்பா பவுமா, அவர் ஆட்டமிழந்து 3 ஓவர்களில் டேல் ஸ்டெய்ன், அவர் ஆட்டமிழந்து 3 ஓவர்களில் கைல் அபொட் என, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இறுதியில், 71 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் டீன் எல்கர் 40, ஏபி டி வில்லியர்ஸ் 37, ஸ்தியான் வான் ஸைல் 33, ஜே.பி டுமினி ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், ஸ்டீவன் பின் 4, மொயின் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தவிர, ஸ்டுவேர்ட் ப்ரோட், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர், தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
டேர்பனில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிக் கொம்ப்டனின் 85 ஓட்டங்களின் துணையோடு 303 ஓட்டங்களைப் பெற்றது. டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்க்கல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
தென்னாபிரிக்க அணி சார்பாக டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பந்துவீச்சில், ஸ்டுவேர்ட் ப்ரோட், மொயின் அலி இருவரும் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மீண்டும் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜொனி பெயர்ஸ்டோவின் 79, ஜோ றூட்டின் 73 ஓட்டங்களின் துணையோடு 326 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்காவின் டேன் பியட், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக, இங்கிலாந்தின் மொயின் அலி தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .