2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

போராடுகிறது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியின் முதல்நாள் முடிவில், இலங்கை அணி போராடி வருகிறது.

காலி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி, 281 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. முதலாவது பந்திலேயே முதலாவது விக்கெட்டை இழந்த இலங்கை அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 9 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், மூன்றாவது விக்கெட்டுக்காக 108 ஓட்டங்கள் பகிரப்பட்டன.

முதலாவது போட்டியில் 176 ஓட்டங்களைப் பெற்று, போட்டியின் நாயகன் விருதைப் பெற்ற இளம் வீரர் குசால் மென்டிஸ், துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசித்து, 86 ஓட்டங்களையும் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் 54, குசால் பெரேரா 49, தனஞ்சய டி சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிற்சல் ஸ்டார்க் 5, நேதன் லையன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதில், தனது 3ஆவது விக்கெட்டைக் கைப்பற்றும் போது மிற்சல் ஸ்டார்க், தனது 100ஆவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, முதல்நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்ட விஷ்வா பெர்ணான்டோ, போட்டியின் 2ஆவது பந்திலேயே விக்கெட்டைக் கைப்பற்றினார். எனினும், டேவிட் வோணரின் அதிரடித் துடுப்பாட்டம் காரணமாக, அவுஸ்திரேலிய அணி முன்னிலையைப் பெற்றது. ஆனால், இறுதி ஓவரின் 3ஆவது பந்தில், டில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் டேவிட் வோணர் ஆட்டமிழக்க, இரு அணிகளுக்குமே முன்னிலை நிலைமையற்ற நிலைமை உருவாகியுள்ளது. டேவிட் வோணர், 41 பந்துகளில் 42 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .