2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பிழையைத் தட்டிக் கேட்டமைக்காக வசைபாடப்பட்டேன்: தமிம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில், சிட்டகொங் விக்கிங்ஸ் அணிக்கும் சியல்கொட் சுப்பர்ஸ்டார்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, தன் மீது வசைபாடப்பட்டதாக, சிட்டகொங் அணியின் தலைவர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இப்போட்டியில், சியல்கொட் அணியின் ரவி போப்பாரா, ஜொஷ் கொப் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அனுமதிச் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், நாணயச் சுழற்சியானது 15 நிமிடங்களால் தாமதிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர், நாணயச் சுழற்சி இடம்பெற்ற போது, தமிம் இக்பாலிடம் கையளிக்கப்பட்ட சியல்கொட் அணி விவரத்தில், போப்பாரா, கொப் இருவரினதும் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. 4 வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்ற வேண்டிய விதி காணப்பட்ட நிலையில், 2 பேரை மாத்திரம் சேர்க்க, அவ்வணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தமிம் இக்பாலும் திலகரட்ண டில்ஷானும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கும் போது, போப்பாராவும் கொப்-உம், களத்தடுப்பில் ஈடுபட ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையால், சர்ச்சை ஏற்பட்டது.

விதிகளுக்கு முரணாக, வழங்கப்பட்ட அணி விவரத்தில் உள்ளடக்கப்படாத வீரர்களை விளையாட அனுமதிக்க முடியாது என தமிம் வாதிட, தங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக சியல்கொட்டின் முஷ்பிக்கூர் ரஹீம் தெரிவித்தார்.

இப்பிரச்சினையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில், தன்னை நோக்கி வந்த சியல்கொட் அணியின் உரிமையாளரான அஸிஸூல் இஸ்லாம், தன்னை நோக்கித் துர்வார்த்தைகளைப் பயன்படுத்தி, தன் குடும்பத்தைப் பற்றி வசைபாடியதாக, தமிம் தெரிவித்துள்ளார்.

தேசிய அணியின் வீரர்கள், மதிக்கப்பட வேண்டியவர்களெனத் தெரிவித்த தமிம், பணமிருக்கிறது என்பதற்காக, தேசிய வீரர்களை எவரும் பிச்சைக்காரர்களைப் போல் நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். விளையாடுவதற்கே அங்கு சென்றதாகத் தெரிவித்த அவர், தனது குடும்பத்தைப் பற்றிய வசைகளைக் கேட்பதற்காக அன்று எனவும் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .