2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

விமர்சனத்தைச் சந்திக்கும் குயீன்ஸ் பார்க் ஓவல்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி, ட்ரினிடாட் அன்ட் டொபாக்காவிலுள்ள போர்ட் ஒப் ஸ்பெய்னின் குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மைதானத்திலுள்ள வசதிகள் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இப்போட்டி, கடந்த 18ஆம் திகதி ஆரம்பித்த போதிலும், முதல் நாளில் வீசப்பட்ட 22 ஓவர்களே, முதல் 3 நாட்களிலும் வீசப்பட்ட மொத்த ஓவர்களாக அமைந்துள்ளன. முதல் நாளில் மழை பெய்த நிலையில், இரண்டாவது நாளில் பெருமளவுக்கு மழை பெய்திருக்கவில்லை. ஆனால், மைதானம் தொடர்ந்தும் ஈரமாகக் காணப்பட்டதால், போட்டி இடம்பெறவில்லை.

மூன்றாவது நாளான சனிக்கிழமை, இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்குப் போட்டி ஆரம்பிக்கவிருந்த போதிலும், ஈர நிலைமை தொடர்ந்ததால், போட்டியை ஆரம்பிக்க முடியவில்லை.

மைதானத்தில் வடிகாலமைப்பு வசதிகள் மோசமான நிலையில் காணப்படுவதோடு, மைதானத்தில் ஈரத்தைக் காய வைக்கும் "சுப்பர் சொப்பர்" என அழைக்கப்படும் உபகரணம், அம்மைதானத்திடம் இருந்திருக்கவில்லை. அத்தோடு, இலங்கையில் காணப்படுவது போன்று, மைதானத்தை முழுமையாக மூடும் வசதியும் காணப்பட்டிருக்கவில்லை.
அதற்குப் பதிலாக, மைதானத்தைக் கிளறி, அதற்கு வெப்பமான காற்றைச் செலுத்துவதன் மூலம், மைதானத்தைக் காய வைக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. ஆனால், அதுவும் வெற்றியளிக்காத நிலையில், மூன்றாவது நாளும், ஓர் ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டிருந்தது. இதனால், இம்மைதானம் குறித்து விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையுடனான தொடரில் அவுஸ்திரேலிய அணி சந்தித்த 0-3 என்ற தோல்வியைத் தொடர்ந்து, உலகில் முதல்நிலை டெஸ்ட் அணியாக மாறியுள்ள இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இந்த 4ஆவது டெஸ்ட் போட்டியை வென்றால் மாத்திரமே முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமென்பதோடு, அவ்வாறில்லையெனில், பாகிஸ்தான் அணி முதலிடத்தைப் பெற்றுக் கொள்ளுமென்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .