2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டு. மத்தி கல்வி வலயத்தால் புறக்கணிப்பு'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 12 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அதிபர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தால் வேண்டும் என்று புறக்கணிக்கப்படுவதாக பகிரங்கச் சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய ஏறாவூர் நகரக் கிளை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் ஆகியோருக்கு முறைப்பாட்டு மனுவை இன்று ஞாயிற்றுக்கிழமை பகிரங்கச் சேவை ஓய்10தியர்களின் நம்பிக்கை நிதிய ஏறாவூர் நகரக் கிளை அனுப்பியுள்ளதாக அதன்   செயலாளர் எஸ்.எம்.சுலைமாலெப்பை தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சரையும் மாகாண கல்விப் பணிப்பாளரையும் தமது அமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்தித்து தெரியப்படுத்தவுள்ளதாக நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.எஸ்.அபூல்ஹஸன் கூறினார்.

குறித்த மனுவில், 'மறுசீரமைப்பு செய்யப்பட்ட இலங்கை அதிபர் சேவை பிரமாணத்தின் கீழ் உள்ளீர்ப்பு செய்யப்படக்;கூடிய சம்பளத் திட்டம், சீராக்கல் படி வழங்குவதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அசிரத்தை காட்டுகின்றது.

மேலும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளீர்ப்பு பணி ஆரம்பிக்கப்பட்டபோதிலும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் இதுவரையில் அவர்களின் கோவைகள் செய்து முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக எமது ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அதிபர்களும் மன வேதனை அடைகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு கடந்த நான்காம் திகதி எம்மால் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு எவ்வித பதிலும் இதுவரையில் கிடைக்கவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'மட்டக்களப்பு மத்தி வலயத்தில் மாத்திரம் தரம் -1 அதிபர்களுக்கான சீராக்கல் படி விடயத்தில் வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. காரணம் இன்றிய மேற்படி புறக்கணிப்பால் ஓய்வுபெற்ற அதிபர்கள் விசனப்பட்டுக் கொள்கின்றனர். எனவே, தரம் -1 ஓய்வுபெற்ற அதிபர்கள் அனைவருக்கும் 770 ரூபாய் சீராக்கல் படியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், இதன்படியே சீராக்கல் செய்து ஓய்வூதியர்களின் கோவைகளை ஓய்வூதிய திணைக்களத்துக்கு மிக விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்'; எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X