2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'கால தாமதமின்றி சட்டத்தின் பலாபலன்கள் கிடைக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பு'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 20 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்டத்தின் பலாபலன்கள் காலம் தாழ்த்தாது கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

'நீதிக்கான மாற்றத்துக்காகப் பரிந்துரைப்போம்' என்ற தொனிப்பொருளில் சிவில் சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சட்டத்தில் பொதுமக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்களோ, அது காலம் தாழ்த்தாது அவர்களுக்கு இலகுவான முறையில்; கிடைக்க வேண்டும் என்பதேயாகும்' என்றார்.

'நீதியைப் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பு சமூகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீதியின் ஊடாக நாங்கள் அடைந்துகொள்ளக்கூடிய அம்சங்கள் என்ன என்பதை சகலரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்' என்றார்.  

'நீதியின் ஊடாக நாங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் யாவும் சமூகப் பொறுப்புள்ளவர்கள் மூலமாகக் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றமை இயல்பு. மக்களுக்கு நீதியின் பலாபலன்கள் கிடைக்காவிட்டால், அதன் எதிர் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும். நீதி சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட்டால்,  சமூக மாற்றம் சாதமாக இருக்கும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

உற்பத்தித்திறன் அபிவிருத்திக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுமார் 70 பேர் கலந்துகொண்டதாக அந்நிலையத்தின் பணிப்பாளர் எம்.ரகுநாதன் தெரிவித்தார்.

நீதி ஏன் எமக்குத் தேவை, மாற்றத்துக்கான பரிந்துரைகள், சட்ட உதவிகள், மனித உரிமைச் செயற்பாடுகள், சட்ட ஆட்சி, சுயாதீன ஆணைக்குழுக்களும் அதன் செயற்பாடுகளும் ஆகிய விடயதானங்களில் வல்லுநர்கள் கருத்துரை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X