Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மையால் ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்தமை தொடர்பில் விசாரணை நடத்தி நீதியினைப் பெற்றுத்தரக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில்; பெற்றோர், கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சிறுவனின் உயிர் காவு கொள்ளப்பட்ட சம்பவம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளமை பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அரசினால் நாளாந்தம் பல மில்லியன் ரூபாய் செலவில் இலசவமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சிகிச்சை முறையில் சில வைத்தியசாலைகளின் பொறுப்பற்ற தன்மை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
களுவாஞ்சிக்குடி மாரியம்மன் வீதியினைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவனான மேகநாதன் மோகவர்மன் காய்ச்சல் காரணமாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சுமார் ஒன்பது மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்துள்ளான்.
பல நாட்கள் கடந்தாலும் பெற்றோர் நியாயம் பெறும் நோக்கில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சு, சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட பல நீதி வழங்கும் அமைப்புக்களுக்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அனுப்பி வைத்துள்ள நிலையில் இறுதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எனது மகனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக 11.05.2016 அன்று களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. மறுநாள் (12) மகனை திரும்பவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என்பன செய்து அன்றையதினம் மாலை 4.00 மணியளவில் வைத்தியசாலை விடுதியில் அனுமதித்தனர். அதன் பின்னர் 14.05.2016 அன்று காலையில் காய்ச்சல் முற்றாக குணமடைந்து விட்டதாக கடமையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் அன்றயதினம் (14), சுமார் நண்பகல் 12.00 மணியளவில் மகன் வாந்தி எடுத்தமை, வயிற்று நோ ஏற்பட்டமை தொடர்பில் அங்கு கடமையில் இருந்தவர்களுக்கு தெரியப்படுத்தியபோது ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறி 14ஆம் திகதி இரவு சுமார் 7.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி மூலம் அனுப்பினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றடைந்ததும் அனுமதிக்கும் பிரிவில் இருந்த வைத்தியர் மகனின் நோய் நிலைமையினை அறியாது அவரது கருத்து நகைச்சுவையாக அமைந்தது. இது என்னை மிகவும் கவலையடையச் செய்தது. பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து வாந்தி குறைவடைவதற்கு ஊசி போடப்பட்டன. மீண்டும் வாந்தி வந்தது. அதனுடன் வயிற்று நோ உள்ளதாகவும் கூறினான் ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இரவு 10.00 மணிக்கு 33ஆம் விடுதிக்கு அனுப்பி வைத்தனர். மகனின் வேதனை தாங்க முடியாது கடமையிலிருந்த உத்தியோகத்தர்களிடம் எடுத்துக் கூறினேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் ஊசி போட்டிருக்கின்றோம். குணமடையும் எனவும் ஒன்றுமில்லை எல்லாம் நோமல் நீங்கள் போய் நித்திரை செய்யுங்கள் என்றனர். மகனின் நிலைமையினை உணர்ந்து பல தடவைகள் எடுத்துக் கூறிய போதிலும் கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் பொறுப்பற்ற தன்மையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
அவதியுற்ற நிலையில் மகன் 15ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் டொக்டர் என்னைக் காப்பாற்றுங்கள் என்று எனது மகன், சத்தமிட்டுக் கத்தினான். அதற்கு உத்தியோகத்தர்களின் பதில் பெரிய ஐயா காலையில் வந்து பார்ப்பார் என்று பதிலளித்தனர். பின்னர் 5.30 மணியளவில் எனது மகன் துடித்துப் புரண்டு சோர்வடைந்தான். அந்த நிலையில் கடமையில் இருந்த தாதிகளிடம் ஓடிச்சென்று சம்பவத்தினைக் கூறினேன். அவர்கள் பக்கத்து விடுதி வைத்தியரை அழைத்து வந்தனர். நிலைமை மோசமானபோது அங்கும் இங்கும் அதை எடு இதை எடு என மாறிமாறி ஓடினார்களே தவிர அவசரத்திற்கு பொருத்துவதற்கான எதுவிதமான கருவிகளும் தயார் நிலையில் இருக்கவில்லை. அதிகாலை 5.45 மணியளவில் அப்போது இருந்த வைத்தியர் யாருக்கோ தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார் ஒரிரு நிமிடங்கள் வரை ஏதோ வயர்களை பொருத்த முற்பட்டனர்.
பின் ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்தனர் பொருத்த முயன்ற அச் செயலை கைவிட்டனர். அப்போது எனது மகன் உயிர் பிரிந்ததை அறிந்து கொண்டேன்.
மனித உரிமைகள் ஆணைக்குழு மூலமாக இதற்கு நீதியான தீர்வினை பெற்றுத்தருவதுடன் எதிர் காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் யாருக்கும் இடம் பெறக் கூடாது' என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025