2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'சம்மந்தன் தலைமையில் தீர்வை பெற்றெடுக்க வேண்டும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பதவிகள் கிடைத்து தற்போது சில நாட்கள் மாத்திரம்தான். இன்னும் காலம் செல்லச் செல்லத்தான் எமது கூட்டமைப்பின் செயற்பாடுகள் வெளிப்படும்.

ஆகவே அனைவரும் இணைந்து சம்மந்தனின் எதிர்க் கட்சி பதவியினைப் பலப்படுத்தி சம்மந்தன் தலைமையில் தமிழ் மக்களுக்குரிய தீர்வை பெற்றெடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆயிரக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட் பின்னர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகச் சென்றார். ஆனால் இலட்சக் கணகானவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தற்போது சம்மந்தன் எதிர்க் கட்சித் தலைவராகச் சென்றுள்ளார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பதவிகளுக்காக நாடாளுமன்றம் செல்கின்றதா அல்லது உரிமைக்காக நாடாளுமன்றம் செல்கின்றதா என்பதை கூட்டமைப்பு எதிர்காலத்தல் நிருபித்து காட்டும்.

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறு மூலையில் 158 பேர் படுகொலை, அதே மாதம். 9 ஆம் திகதி சத்திருக்கொண்டான் படுகொலை, 21ஆம் திகதி புதுக்குடியிருப்பு படுகொலை,  போன்றன இடம்பெற்றதோடு காரைதீவிலிருந்து மட்டக்களப்பு வரை 1990ஆம் ஆண்டு மிக மோசமான படுகொலைகள் இடம்பெற்றன. எனவே 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு கொடூரமான மாதமாக பார்க்கப்படுகின்றது.
 
கடந்த காலங்களில் நான் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்குப் பணி செய்தேன். ஆனால் தற்போது நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து எனது அரசியல் பணியையும் சமூகப் பணியையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.
 
அமிர்தலிங்கம் எதிர்க் கட்சியாக தலைவராக சென்ற காலம் வேறு சம்மந்தன் எதிர்க் கட்சி தலைவராக சென்றுள்ள காலம் வேறு. இதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைப் புரிந்து  கொள்ளலாமல் தற்போது பலரும் பல விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.
 
தந்தை செல்வாவின் அகிம்மை ரீதியான போராட்டதின் பின்னர் கிடைத்த பதவிதான் அமிர்தலிங்கத்திற்குரிய எதிர்க்கட்சிப் பதவியாகும். பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் பின்னர் கிடைத்துள்ளதுதான் சம்மந்தனின் எதிர் கட்சிப் பதவியாகும்.
 
தற்போது கிடைத்திருக்கின்ற எதிர்க் கட்சி பதவியை வைத்துக் கொண்டு சம்மந்தன் எதைச் சாதிக்கப் போகின்றார் என்ற கேள்வி வந்து கொண்டிருக்கின்றது.

சம்மந்தன் எடுக்கின்ற தீர்மானங்கள் அனைத்தும் ஒரு இன விடுதலையை நோக்கியதாக அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X