2025 மே 08, வியாழக்கிழமை

'நிகழ்வுகளில் உள்ளூர் உணவுகளை வழங்கி உபசரிக்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

நிகழ்வுகளில் உள்ளூர் உணவுகளை வழங்கி உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டுமே தவிர, வெளியூர்களில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகும்.உணவுப் பொருட்களையோ குடிபானங்களையோ பகிர்ந்தளிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை(07) தாந்தாமலையில் இடம்பெற்ற விவசாய வீதி, மதகு மற்றும் தடுப்புச் சுவர் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது,

இப்பொழுது ஒரு புதுவகைக் நடைமுறை உருவாகியிருக்கின்றது. அதாவது நமது பிரதேசத்தில் நடத்துகின்ற நிகழ்வுகளுக்கு சிற்றுண்டியாக வெளி இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கி உபசரிக்கின்றோம்.

குறிப்பாக வெளியிடங்களில் உற்பத்தி செய்யப்படும் குளிர்பானங்கள் பலவற்றை வழங்குகின்றோம். இவை இயற்கையான உணவுகளும் அல்ல. அவற்றில் எவ்வாறோ செயற்கைச் சுவையூட்டிகளும் இரசாயனங்களும் கலந்திருக்கும். இவை உடல் நலத்துக்கும் ஊறுவிளைவிக்கக் கூடியவை. எனவே இது பற்றி எல்லோரும் சிந்திக்க வேண்டும்.

இத்தகைய விருந்தோம்பலுக்குப் பதிலாக  நமது காலடியில் கிடைக்கின்ற பால், பழங்கள், இளநீர், மூலிகை கலந்த பானங்கள் இவற்றை உண்ணவோ பருகவோ வழங்கினால் அது ஆரோக்கியமானது.

உள்ளூர் உணவுப் பொருட்களை வழங்குகின்ற போது எமது பிரதேசத்து உணவுகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய முடிவதுடன், அவை ஆரோக்கியமான உணவுகளாகவும் அமையும். இதேவேளை, எமது பணமும் எமது பிரதேசத்துக்குள்ளே இருக்கும். அதைவிடுத்து வெளி உணவுகளை கொள்வனவு செய்கின்றபோது எமது பணமும் வெளியில் செல்கின்றது.

எம்மிடத்தில் இருப்பதை பயன்படுத்தாமல் வெளியில் இருந்து கொள்வனவு செய்வதினால்  நாம் முன்னேற்றம் இல்லாதவர்களாக இருந்து கொண்டே இருக்கின்றோம். மேலும் உள்ளூர் உற்பத்திக்கு இருக்கின்ற மரியாதையும் பெரிதானது இவற்றை புரிந்து அனைவரும் நிகழ்வுகளுக்கு உள்ளூர் உணவுப்பொருட்களை வழங்குவதில் சிரத்தை கொள்ள வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X