2025 மே 09, வெள்ளிக்கிழமை

'மாற்றுத்திறனாளிகள் சமமாக நடத்தப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மாற்றுத்திறனாளிகளை சமூகத்துடன் இணைத்து சமமாக நடத்த வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்து பல்வேறு துறைகளிலும் சேவையாற்றும் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் புதன்கிழமை (23) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சமூகத்தின் ஓரங்கமாகவுள்ள  மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறுபட்ட திறமைகள் மறைந்து கிடக்கின்றன. சமூகத்தின் மேம்பாட்டுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும்; மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு முக்கியமாகும்.

இன்று மாற்றுத்திறனாளிகளின் கல்வி நடவடிக்கை மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காக சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் சேவையாற்றுகின்றன' என்றார்.

இதேவேளை, இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு கல்வி வலயத்தின் விசேட கல்விக்கான இணைப்பாளர் எம்.தயானந்தன், "மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 38 பேர் சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர். சமூகத்தில் சகல நிலைகளிலும் அவர்கள் உள்வாங்கப்படல் வேண்டும். இவர்களைப் பார்த்து அனுதாபப்படுவதை விட ஆதரவு வழங்குங்கள்" என்றார்.

"சாதாரண பாடசாலைகளில் ஆண்டு ஒன்று முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரையான வகுப்புகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் பலர் வாய்பேச முடியாதவர்களாகவும் பார்வை அற்றவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு  உட்படுத்தலின் ஊடாக கல்வி போதிக்கப்படுகிறது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X