2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனங்களுக்கு பணம் பெறப்பட்டால் அறிவியுங்கள்: முரளிதரன்

Super User   / 2012 ஜூன் 03 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)


கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளோ அல்லது முகவர்களோ பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டால் அது தொடர்பில் எனக்கு தெரியப்படுத்துங்கள் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

அத்துடன் இந்த தொழில் நியமனத்தில் எந்தவிதமான அரசியல் பலமும் பயன்படுத்தப்படாமாட்டாது என்பதுடன் ஆண்டு அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, முறைகேடான நியமனங்கள் இடம்பெறக்கூடாது, மூப்பு அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும் வலது குறைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் விடுத்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,

"ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைவாக திறைசேரிக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமைவாக இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. பட்டதாரிகளாகிய உங்களது நீண்ட கால முயற்சிக்கு தற்போது பயன் கிடைத்திருக்கிறது. உங்களது சங்கம் பலமானது, இது தொடர்ச்சியாக இயங்க வேண்டும்.

பட்டதாரிகள் யாரும் எந்த ஒரு அரசியல்வாதிக்கும், முகவருக்கும் சிறு தொகையை கூட வழங்கி பிரச்சினைகளை ஏற்படுத்தி விட வேண்டாம். அவ்வாறானவர்கள் தொடர்பான விபரங்களை எனக்கு அறியத் தரவும்.  பரீட்சைகள் மூலம் பட்டதாரிகளை அரசாங்க நியமனங்களில் உள்வாங்கும் முறைமை நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் நேர்முக பரீட்சைகளின் மூலம் அரச நியமனங்களில் உள்வாங்கப்படுவீர்கள். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேர்முக பரீட்சைகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள். அத்துடன் நேர்முக பரீட்சை முடிவுற்றதும் அது தொடர்பிலும் எனக்கு தெரியப்படுத்துங்கள். நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்தும் ஏற்படும பண வீக்கத்துக்கு ஏற்றால் போல் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டாவே இது வாகும்.

இதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. இந்த நேர்முக பரீட்சையில் அனைத்து பட்டதாரிகளும் பங்கு கொள்ளுங்கள். உங்களுடைய நியமனங்களை வழங்குவதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்று செயற்படுத்துகிறது.

அதன் மூலமும் பண வீக்கம் அதிகரிக்க போகிறது. பொருளாதாரத்தினை வளப்படுத்துவதற்காக பெரும் சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .