2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தந்தை செல்வா, மர்ஹும் அஷ்ரபின் பக்குவம் வரும்வரை தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒருபோதுமே ஒன்று

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               (எம்.சுக்ரி)
தந்தை செல்வாவின் பக்குவத்தையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் பக்குவத்தையும் முஸ்லிம் மக்களும் பெறும் வரை தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

அவர் அங்கு தொடர்ந்து, உரையாற்றுகையில், "தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் இணைந்து ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டுமென குரல்கொடுக்கப்படுகின்ற இக்கால கட்டத்தில் தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒன்றிணைவதாக இருந்தால் தமிழ் தேசியமும் தமிழர்களும் முஸ்லிம்களுக்கு என்ன செய்தார்கள், முஸ்லிம் தேசியமும் முஸ்லிம் இளைஞர்களும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை சுயவிமர்சன அடிப்படையிலே சிந்தித்து பாரம்பரிய உறவு மீட்டெடுக்கப்பட வேண்டும்.

தமிழ் சமூகம், நாங்கள் பெரிய சமூகம், குழந்தை தாயிடம் குடுகுடுவென்று ஓடுவதைப் போல முஸ்லிம்கள் எமக்குக் கீழால் இருக்க வேண்டுமென்று நினைக்கக் கூடாது. அதே போன்று தமிழ் சமூகம் தங்களிடம் கெஞ்ச வேண்டுமென்றும் முஸ்லிம் சமூகம் நினைக்கக் கூடாது.

பாரம்பரிய உறவு மீட்டெடுக்கப்பட வேண்டும். 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் உன்னிச்சை கிராமத்திலிருந்து காத்தான்குடிக்கு இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம் விவசாயிகள் தற்போது மீளக்குடியமர்த்தப்படுகின்ற போது, 'முஸ்லிம்களா? அவர்களுக்கு எங்கே இங்கு வீடுகள், காணிகள்?' என அங்கிருக்கும் தமிழ் மக்கள் கேட்கின்றனர். முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் புதிய சந்ததியினர் தோன்றி இருப்பதனால் விடயம் தெரியாது சொல்கின்றனர்.

காரைதீவில் வைத்து முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முறக்கொட்டாஞ்சேனையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் இருக்கின்றனவா என கேள்வியெழுப்புகின்றனர்.

இரண்டு தரப்பினரும் ஒற்றுமையாக வேண்டுமாயின் தமிழ்த்தேசியத்திற்கும் முஸ்லிம் தேசியத்திற்கும் இடையில் சுய நிர்ணய உணர்வுக்கு இரு சாராரும் வர வேண்டும்.

செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தீர்மானம் வெளியிடுவதற்கு முன்னர், ஸ்ரீ.ல.மு.கா 100வீதம் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் என்று எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் படுமோசமாக எம்மை விமர்சித்திருந்தன.

எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு சுயாதீனமாக சிந்தித்து முடிவெடுக்கும் தன்மை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.

ஆகவே, த.தே.கூ உறுப்பினர்கள் தலைவர்கள், ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்கக்கூடிய தந்தை செல்வாவின் பக்குவம் இல்லாமலிருக்கும் பட்சத்தில் தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒன்றுபடுவதானது சாத்தியமற்றதாகும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .